சைந்தவி - ஜிவி பிரகாஷ் தம்பதியின் 11 ஆண்டு காதல்  திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது!

Su.tha Arivalagan
May 14, 2024,06:41 PM IST

- பொன் லட்சுமி


சென்னை: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அழகு வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.


இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும், அவரது மனைவியான பாடகி சைந்தவியும் மண வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.


நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார்- பாடகி சைந்தவி தம்பதி , தங்களது 11 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும், நன்கு  யோசித்து முடிவெடுத்து தான் நாங்கள் விவாகரத்து செய்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.




தமிழ் சினிமாவில் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் ஜி.வி.பிரகாஷ்.  தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்தார்..  ஆயிரத்தில் ஒருவன்,  பொல்லாதவன், மயக்கம் என்ன  போன்ற இவர் இசையமைத்த பல படங்கள் செம ஹிட் ... அது மட்டுமல்லாமல் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் தான் என்றாலும் அவற்றில் குறிப்பாக டார்லிங், திரிஷா  இல்லனா நயன்தாரா, ரெபெல், பேச்சிலர்  போன்ற போன்ற படங்கள் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றது.


நடிகராகவும் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் பன்முக திறமை கொண்டு அசத்திக் கொண்டு வருபவர் பிரகாஷ் என்றால் அவரது மனைவி சைந்தவியும் பல திறமைகளைக் கொண்டவர்தான். அவர் ஒரு வயலின் கலைஞர் ஆவார். நல்ல பாடகி. இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே காதலித்து அதன் பிறகு பெற்றோர்களின் சம்மதத்தோடு 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு  கடந்த 2020 ஆம் ஆண்டு அன்வி என்ற மகளும் பிறந்தார்.


ஜிவி பிரகாஷின் இசையில் 'பிறை தேடும் இரவிலே ', 'எள்ளு வய பூக்கலையே ' உள்ளிட்ட பல ஹிட்  பாடல்களை பாடியுள்ளார் சைந்தவி.  அதேபோல ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அவர் பாடிய அண்டங்காகாக்கா கொண்டக்காரி பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது. இருவரும் இணைந்து பாடிய  பெண் மேகம் போலவே பாடல் இருவரின் காதலையும் அதிகமாக வெளிப்படுத்துவதாக இருந்தது. இது என்ன மாயம் படத்தில் இடம் பெற்ற இரவாக நீ என்ற பாடல் அவர்களின் இணைப்பில் வெளியான இன்னொரு அருமையான பாடல்.


சமீபத்தில் தான் தங்களுடைய திருமண நாளை இருவரும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். அவ்வளவு சந்தோசமாக வாழ்ந்த அவர்கள் திருமண வாழ்க்கை இவ்வளவு சீக்கிரத்தில் முடியும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்... சில நாட்களாகவே இதுதொடர்பாக செய்திகள் வந்தவண்ணம் இருந்து. அது உண்மையாக இருக்கக் கூடாது என்றுதான் பலரும் ஆசைப்பட்டனர். ஆனால் பிரிகிறோம் என்று இருவருமே முறைப்படி அறவித்து விட்டனர்.


இதுதொடர்பாக  சைந்தவி  தன்னுடைய எக்ஸ் பக்கத்தில்  வெளியிட்டுள்ள  பதிவில்,   11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம்.  இப்போது நானும் ஜிவி பிரகாஷும்  பிரிவதாக முடிவு செய்து இருக்கிறோம். நன்கு யோசித்து தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்.  ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன நிம்மதிக்காக பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறோம்.


இது எங்களின்  தனிப்பட்ட முடிவு. இதை எங்கள் உறவினர்கள், நண்பர்கள்,  ஊடக நண்பர்கள்,ரசிகர்கள் என அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எங்களது பிரவேசியை  மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இருவரும் தனித் தனியாக வளர்வதற்கு இந்த முடிவு அவசியம் என்பதால் பிரிகிறோம். இந்த தருணத்தில் அனைவரும் எங்களுக்கு ஆதரவாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம" என்று பதிவிட்டுள்ளார்.


இதேபோல், ஜிவி பிரகாஷ்குமாரும் இதே வாசகங்களுடன் கூடிய டிவீட்டைப் போட்டுள்ளார்.  இந்த காதல் ஜோடியின் பிரிவு இப்படி முடிந்திருப்பது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.