ஸ்ரீகாந்த் தேவாவின் வித்தியாசமான படைப்பில் .. பக்தி பரவசமூட்டும்.. "முருகனே செல்ல குமரனே"!

Manjula Devi
Jan 25, 2024,04:31 PM IST

சென்னை: பிரபல இசையமைப்பாளரான ஸ்ரீகாந்த் தேவா முருக பெருமான் குறித்த, "முருகனே செல்ல குமரனே" என்ற பக்தி பாடலுக்கு முதன்முறையாக இசையமைத்துள்ளார். இப்பாடல் தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் இன்று ரிலீஸ் செய்துள்ளது.


ஸ்ரீகாந்த் தேவா தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து சிறந்த இசை அமைப்பாளர் விளங்குகிறார். இவர் பின்னணி பாடகர் தேவாவின் மகன். 2000 ஆண்டில் வெளியான டபுள்ஸ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து சிவகாசி, எம். குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி, ஆழ்வார், பூலோகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார்.


இது மட்டுமில்லாமல் ஸ்ரீ ஸ்டுடியோ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 2023 ஆம் ஆண்டு கருவறை என்ற தமிழ் குறும்படத்தில்  இசையமைத்ததற்காக இந்திய அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றவர்.




இந்நிலையில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா முதன் முதலில் முருகன் பாடலுக்கு இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இயக்குனர் பவன் வரிகளில் உருவாகியுள்ளது முருகனே செல்ல குமரனே என்ற பக்தி பாடல். இப்பாடலை சூப்பர் சிங்கர்கள் ஸ்ரீநிதி மற்றும் பேபி அக்ஷரா பாடியுள்ளனர்.


இப்பாடல் உலகமெங்கும் உள்ள முருக பக்தர்கள் மெய்சிலிர்த்து கொண்டாடும் வகையில் உருவாகி உள்ளதாம். மேலும் இப்பாடல் தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகம் எங்கும் இன்று வெளியிட்டுள்ளது. முன்னதாக முருக பக்தரான யோகி பாபு மற்றும் பிரபல நடிகர் நட்டி இருவரும் சேர்ந்து முருகனை.. செல்ல குமரனே .. பக்தி பாடலின் ஆடியோ மற்றும் வீடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.


இந்த பாடலைப் பற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறுகையில்,


வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் மூலம் வெளியாக உள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடல் முருக கடவுளின் பாடல்களில் வரும் காலங்களில் முக்கிய இடத்தை பெறும். முருகப்பெருமானைப் பற்றி குழந்தைகள் கூட பக்தியோடு பாட வேண்டும் என்ற நோக்கத்தில் எளிய மெட்டில், எளிய தமிழில் இதை உருவாக்கியிருக்கிறோம். இந்த பாடலை கேட்டு தைப்பூசத்தில் முருகனை தரிசனம் செய்து, முருக பக்தியில் எந்நாளும் திளைத்திடுவோம் என கூறியுள்ளார்.


பாடலை எழுதிய இயக்குநர் பவண் கூறுகையில், 




இந்த வாய்ப்பை மிகப்பெரிய பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். சொல்ல சொல்ல இனிக்கும், அள்ள அள்ள அருளும் முருகப்பெருமானை பற்றிய அருமையான பாடல் அவன் அருளாலே மிகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று கூறியுள்ளார்.


நடிகர் யோகிபாபு மற்றும் நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடலை வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர்.