தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்

Su.tha Arivalagan
Aug 19, 2024,06:20 PM IST

சென்னை:  தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் அடுத்த தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.




தமிழ்நாடு அரசின் 50வது தலைமைச் செயலாளர் முருகானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையைச் சேர்ந்த முருகானந்தம் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.  தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிபிரிவுச் செயலாளராக இருந்து வருகிறார். முதல்வரின் நன்மதிப்பைப் பெற்றவர். முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள் வட்டத்தில் இருப்பவர். இவரது செயல்பாடுகள் முதல்வரைக் கவர்ந்துள்ளன. மேலும் முதல்வரின் வலது கரம் போல செயல்பட்டவரும் கூட. இதன் காரணமாகவே முருகானந்தத்தைத் தேடி தலைமைச் செயலாளர் பதவி வந்து சேர்ந்துள்ளது.


நிதித்துறை, தொழில்துறையில் சிறந்து விளங்கியவர் முருகானந்தம். இவரது செயல்பாடுகளால் தொழில்துறையில் பல்வேறு நல்ல விஷயங்கள் நடந்து, பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசுக்கு ஒப்பந்தம் ஏற்பட காரணமாக அமைந்தது. இதுவும் கூட முதல்வரைக் கவர்ந்தது. மேலும் நிதித்துறைச் செயலாளராக இருந்தபோது அப்போது நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மதிப்பையும் பெற்றிருந்தார் முருகானந்தம்.


தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி என்பதோடு, தமிழ்நாட்டின் தேவைகளைப் புரிந்து கொண்டவர் என்பதோடு, முதல்வருக்கு மிக நெருக்கமாக, அவரது வேகத்துக்கு ஈடு கொடுத்து செயல்படக் கூடியவர் என்பதாலும், தமிழ்நாட்டில் பல்வேறு பணிகளை திமுக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அனைத்துத் துறைச் செயலாளர்களையும் முடுக்கி விட்டு வேலை வாங்கக் கூடிய திறன் படைத்தவர் என்பதாலும், புதிய தலைமைச் செயலாளர் பதவிக்கு முருகானந்தம் அமர்த்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்