மண்பானையில் தண்ணீர் குடிச்சா.. நம் முன்னோர்கள் ஒன்று முட்டாள்கள் இல்லை.. நெசமாத்தாங்க!

Su.tha Arivalagan
Apr 03, 2024,10:58 AM IST

- பொன் லட்சுமி


சென்னை: அந்தக் காலத்தில்  கிராமத்தில் எல்லா வீடுகளிலும் முக்கிய பொருளாக இருந்தது மண்பானைகள் தான்... குடிநீருக்கு மட்டுமல்லாமல்  சமையலுக்கும்  மண்பானைகளை தான் உபயோகித்தார்கள்... மண் பானையில் வைத்த நீர் உடலுக்கு குளிர்ச்சி தருவதை போல், மண் சட்டியில் செய்த சமையல் உடலுக்கு தேவையான அத்தனை  ஆரோக்கியத்தையும் தந்தது.


ஆனால் இன்று நாகரிகத்தின் தொட்டிலில் நாம் நின்று கொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பதால், "நான் ஸ்டிக்" பொருட்களை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.. இதனால் உடலில் அவ்வளவு நோய் நொடிகள் வந்து குவிந்து கும்மியடித்துக் கொண்டிருக்கிறது.


நாம் மறந்து போன பழமைகளில் முக்கியமானது, மண்பாண்டங்கள்தான். அதைப் பார்ப்போம்.


மண் பானை குடிநீர்:-




மண்பானை ஒரு மிகச்சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ஆகும்.. மண்பானையில் சிறு சிறு துவாரங்கள் இருக்கும். வெயில் காலத்தில்  வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த நுண்துவாரங்கள் வழியாக பானையின் வெப்பமும், தண்ணீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாவதன் மூலம் வெளியேற்றப்படுகிறது. மண்பானையில் ஊற்றி வைக்கப்படும் தண்ணீர் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வைத்திருந்தால் அதில் உள்ள கெட்ட பொருள்கள் அனைத்தையுமே எடுத்துக் கொண்டு  நீருக்கு மண் சக்தியை அளிக்கும். அதனால்தான் மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீர் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கிறது. 


அக்காலத்தில் பெரும்பாலும் நம் முன்னோர்கள் நிலத்தடி நீரையே குடிநீராக பயன்படுத்தி வந்தார்கள்.. அந்த நீரில்   வெட்டிவேர் போன்றவற்றை ஊறவைத்து, பின்பு வடிகட்டிக்  குடித்தனர். அந்த நீரை மண்பானையில் வைத்து  குடிக்கும்போது அதில் உள்ள அனைத்து தாதுக்களும் நேரடியாக அவர்களுக்கு சென்று சேர்ந்தது.. அது மட்டுமல்லாமல் உடம்பிற்கு  குளிர்ச்சியையும் தந்தது.


மண்பானை மட்டுமல்லாது  வெண்கலம் செம்பு போன்ற பாத்திரங்களிலும் தண்ணீர் வைத்து குடித்தனர் .. இன்று நாம் நாகரிகத்தின் வளர்ச்சியினால்  மினரல் வாட்டரை  பிரிட்ஜில் வைத்து  உபயோகப்படுத்துகிறோம்... இதில் நீரின் தாதுக்கள்  எதுவுமே கிடைப்பதில்லை உடம்பிற்கும் கேடு தான் விளைகிறது.


மண்பானை சமையல்:-




மண் பாத்திரத்தில் சமையல் செய்யும் பொழுது வெப்பம் ஒரே சீராக  அனைத்து இடத்திற்கும் பரவும். நீண்ட நேரம் வெப்பத்தை தக்க வைத்துக் கொள்வதால்  மண் பானையில் செய்த சமையல் மிகவும் சுவையாகவும் ... நீண்ட நேரம் கெடாமலும் அதே சமயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.. நம் முன்னோர்கள்  அதிக வயது வரை எந்த நோய் நொடியும் இல்லாமல் வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் இந்த மண்பானை சமையல் தான்... ஆனால் இன்று நாம் அழகுக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் நான் ஸ்டிக்  போன்ற பொருள்களில் சமையல் செய்து நமது ஆரோக்கியத்தையும் கெடுத்தது மட்டுமல்லாமல், நமது ஆயுட்காலத்தையும் குறைத்துக் கொண்டிருக்கிறோம்..

மீண்டும் புது பொலிவுடன் :-




சமீப காலமாக மக்கள் இது போன்ற மண் பாண்டங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.. இது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம் ஆகும். முன்பை விட மக்கள்  எந்த பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தினால் ஆரோக்கியமாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்... அதன் விளைவாக இன்று மண்பானைகள் வாட்டர் கேன் போன்ற வடிவமைப்பில்  விற்பனைக்கு வந்து விட்டது. சமையலுக்கு தேவையான  அனைத்து பாத்திரங்களும் புதுப்பொலிவுடன் மண் பானையில் வந்து விட்டது.


மண்பானை மட்டுமல்லாது காப்பர், செம்பு போன்றவற்றிலும்  விதவிதமான பாத்திரங்கள் வந்து விட்டன.. அது மட்டுமல்லாமல்  கல்லிலும் வகை வகையான பொருள்கள் தோசைக்கல் முதல்  சமையல் பாத்திரங்கள் வரை அனைத்தும் வந்துவிட்டது.. மண்பாண்டங்களில் இருந்து சமையலுக்கு தேவையான பொருட்கள் மட்டும் அல்லாது கோவில்களுக்கும் வீடுகளுக்கும்  தேவையான விளக்குகளும் செய்யப்படுகின்றன... திருக் கார்த்திகை திருநாளில்  அனைத்து வீடுகளிலுமே இன்றும் அகல்விளக்கு ஏற்றும் வழக்கம் நம்மிடையே இருக்கிறது.


நாகரீகம் காரணமாக நாம் நம் ஆரோக்கியத்தை மட்டும் கெடுக்கவில்லை... மண்பாண்டம் செய்வதையே தொழிலாக வைத்திருந்தவர்களின் வாழ்வாதாரத்தையும் சேர்த்து தான் நாம் கெடுத்துக் கொண்டிருந்தோம்.. இன்று மீண்டும் பொதுப் பொலிவுடன் மண்பாண்டங்களின் வளர்ச்சியும் சரி, அந்த தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரமும் சரி முன்னேற்ற பாதையில் செல்கிறது என்பது மிகப்பெரிய சந்தோசமான  செய்தி.


பலவிதமான நோய்களிலிருந்து நம்மை காத்துக்  கொள்ள உதவும் மண்பாண்டங்கள்  கோடைகாலம் மட்டுமல்லாது அனைத்து காலத்திற்குமே  ஏற்றது.. இதனை அனைவரும் புரிந்துகொண்டு  மண்பானையை பயன்படுத்த வேண்டும்.. என்னங்க இன்னும் என்ன யோசனை வெயில் காலம்  ஆரம்பிச்சாச்சு, கொஞ்ச நாளைக்கு பிரிட்ஜ் எல்லாரும் ஓரம் கட்டிட்டு மண்பானையை வாங்கி கொஞ்சம் வெட்டிவேர் போட்டு  குடிங்க.. உங்க மனசும் ஜில்லுனு ஆயிடும்  உங்க உடம்பும் ஜில்லுனு ஆயிடும்.