சென்னை "பீக் ஹவர்" போக்குவரத்து நெரிசல்.. 12 பஸ் ரூட்டுகளில் 20 சர்வீஸ்கள் அதிகரிப்பு..!
சென்னை: சென்னையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள 12 பஸ் வழித்தடங்களில் 20 சேவைகளை அதிகரிக்க மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் பஸ்களில் நிலவும் கடும் நெரிசலால் பாதிப்படைகின்றனர்.
இதையடுத்து கூட்ட நெரிசல் அதிகம் உள்ள முக்கிய வழித்தடங்களில் பஸ் சேவைகளை அதிகரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகர போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து தற்போது கூட்ட நெரிசல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்ட 12 வழித்தடங்களில் 20 சேவைகளை அதிகரிக்க போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
புதிய பேருந்துகள் இயக்கப்படுவதால் படியில் பயணம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும். மேலும் தானியங்கிக் கதவுகள் உள்ள பேருந்துகளில் படியில் பயணம் செய்ய முடியாது. இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும். புதிய சேவைகள் மூலம் தினசரி காலை 8 மணி முதல் ஒன்பதரை மணிக்கு இடையிலான நேரத்தில் தற்போது 20,000 மாணவர்கள் என்ற அளவிலிருந்து 22,000 மாணவர்கள் வரை கூடுதலாக பயணம் செய்ய வழி கிடைக்கும்.
பள்ளி மாணவர்களின் நலன் கருதி மாணவர்கள் இலவசமாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்ய சிறப்பு டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடுதல் சேவை அறிமுகப்படுத்தப்படும் வழித்தடங்கள்:
29A - பெரம்பூர் - எழும்பூர்
M88 - போரூர்- குன்றத்தூர்
M88 - போரூர்- வடபழனி
54R - ராமாபுரம்-குமனன்சாவடி
54R - ராமாபுரம்- டைடல் பார்க்
153 - கோயம்பேடு-குமனன்சாவடி
147 - தி.நகர்- அம்பத்தூர் தொழில் பூங்கா
56 A - எண்ணூர்- வள்ளலார் நகர்
38 A - மாதவரம்- பிராட்வே
5G - கண்ணகி நகர்- வேளச்சேரி
21 G - கிண்டி- பிராட்வே
21 X - கிண்டி-பிராட்வே (வழி மந்தை வெளி)