காணும் பொங்கல் ஸ்பெஷல்.. ஓட்டுநர் நடத்துநர்களுக்கு லன்ச் சாப்பிட ரூ. 50.. அசத்திய எம்டிசி!

Meenakshi
Jan 17, 2024,01:40 PM IST

சென்னை: சென்னையில் மாநகர சிறப்பு பேருந்து ஓட்டுநர் நடத்துநர்களுக்கு இன்று மதிய உணவிற்காக ரூ. 50 வழங்கப்பட உள்ளது என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


பொங்கல்  கொண்டாடுவதற்கு மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் பொங்கலுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. லட்சக்கணக்கான மக்கள் கடந்த நாட்களில் சொந்த ஊர்களுக்குப் பயணமானார்கள். மக்கள் பயணிக்க ஏதுவாக சிறப்பு  பேருந்துகளை இயக்கியது தமிழ்நாடு அரசு.


பேருந்து நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, ஆன்லைன் வாயிலாக  புக்கிங்  செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. அந்த வகையில், இந்த வருடம் 11 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் முன்பதிவு செய்யப்பட்டது. அத்துடன்  மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சொல்ல ஏதுவாக கூடுதலான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதனால் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது எளிதானது.




தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகள் புறப்பட்டன. தமிழகம் முழுவதும் மொத்தம் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த சிறப்பு பேருந்துகள் மாதவரம், கே.கே நகர், பூந்தமல்லி, கோயம்பேடு, கிளாம்பாக்கம் போன்ற போன்ற பஸ் நிலையங்களிலிருந்து இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து தினசரி 2100 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், பொங்கலை முன்னிட்டு கூடுதலாக  4,706 சிறப்பு பேருந்துகள் வீதம் மூன்று நாட்களுக்கு மொத்தம் 10,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.


இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு சென்னையில் சிறப்பு போருந்துகளை இயக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு  ரூ.50 வழங்க போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு அவர்களுக்கு இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எம்டிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.