Senior Citizens: உங்களுக்கு 60 வயதுக்கு மேலயா.. அப்ப சென்னை சிட்டி பஸ்ல ப்ரீயா போகலாம்!

Su.tha Arivalagan
Jun 18, 2024,04:13 PM IST

சென்னை:   சென்னை மாநகரில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு புதிய சலுகை ஒன்றை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.


ஒவ்வொரு நாட்டிலும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் வழங்கப்படுகிறது. நமது நாட்டில் ரயில் பயணிகளில் முன்பு மூத்த குடிமக்களுக்கு சலுகை இருந்து வந்தது. பின்னர் அது நீக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் ஒரு சூப்பரான சலுகையை அறிவித்துள்ளது.


அதன் படி மூத்த குடிமக்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 6 மாத காலத்திற்கு இலவசமாக பயணிக்க சலுகை வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:




மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து பயணம் என்ற திட்டத்தை மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு ஆறு மாத காலத்திற்கு மாநகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க வசதி செய்யப்படுகிறது. இதற்காக டோக்கன் வழங்கப்படும்.


சென்னையில் உள்ள பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் என 42 இடங்களில் இந்த மாதம் 21ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெறும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


இந்த சலுகையை பெறுவதற்கு மூத்த குடிமக்கள் , இருப்பிட சான்று, குடும்ப அட்டை, வயது சான்று - ஆதார் அட்டை மற்றும் இரண்டு கலர் போட்டோக்களைக் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை பரிசோதித்த பின்னர் அவர்களுக்கு இலவச பயணத்திற்கான டோக்கன் வழங்கப்படும். இதை வைத்துக் கொண்டு 6 மாத காலத்திற்கு அவர்கள் இலவசமாக பஸ்களில் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


தமிழ்நாட்டில் தற்போது மகளிர் மற்றும் திருநங்கையர் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியும். அந்த சலுகையை திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கொடுத்தது. தற்போது மூத்த குடிமக்களுக்கும் ஆறு மாத கால இலவச பயணம் என்ற சலுகையை அரசு கொண்டு வந்துள்ளது. இது வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் இந்த சலுகை நிரந்தரமாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.