பயணிகள் கவனத்திற்கு.. ஸ்டாப்பில் பஸ் நிற்கலையா.. செல்லை எடுங்க.. இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்க!

Su.tha Arivalagan
Apr 26, 2024,05:48 PM IST

சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் போனால் உடனடியாக புகார் தருவதற்காக இலவச சேவை ஒன்றை போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.


சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்து சேவையை சிறப்பாக மேள்கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக ஒரு சேவையை அது அறிமுகப்படுத்தியுள்ளது.


பெரும்பாலான பயணிகளின் பொதுவான குறை என்னவென்றால் முக்கிய நேரங்களில் ஸ்டாப்பில் பஸ் நிற்காமல் போய் விடுகிறது என்பதுதான். குறிப்பாக பீக் ஹவர் நேரங்களில் இதுபோல நடப்பதால் மக்கள் பல்வேறு வகையில் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதை சரி செய்யத்தான் தற்போது புதிய சேவை ஒன்றை போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.




அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் அட்டவணையிடப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் சென்றால் உடனடியாக 149 என்ற எண்ணுக்குப் போன் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் இலவசமான சேவையாகும்.


அந்த எண்ணுக்குப் போன் செய்து, வழித்தடம் எண், பக்கவாட்டு எண், அல்லது பதிவு எண், பேருந்து எங்கிருந்து எங்கு செல்கிறது, நேரம் மற்றும் நிறுத்தாமல் சென்ற பேருந்தின் பெயரை தெரிவிக்கலாம் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்தத் தகவல்களை  94450 30516 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பஸ்கள் சரிவர செயல்படுவது உறுதி செய்யப்படும் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.