ஒரு முறைகேடும் இல்லை.. தொழிலாளர்களின் எல்ஐசி பிரீமியம் முறையாக செலுத்தப்படுகிறது.. எம்டிசி

Su.tha Arivalagan
May 18, 2024,03:00 PM IST

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களின் எல்ஐசி பிரீமியம் தொகையை செலுத்துவதில் முறைகேடு நடப்பதாக வெளியான செய்தியை போக்குவரத்துக் கழகம் திட்டவட்டமாக ஆதாரத்துடன் மறுத்து விரிவான விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை:




மாநகர்  போக்குவரத்துக் கழகத்தில் 18,852 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 12,300 தொழிலாளர்கள்  எல்.ஐ.சி காப்பீடு மாதாந்திர திட்டத்திற்கு சந்தா செலுத்திய வருகின்றனர் . இதற்காக மாதாந்திர சந்தா தொகை மாநகர்  போக்குவரத்துக் கழகம் ரூ. 1.24 கோடி எல்.ஐ‌.சி-க்கு கட்ட வேண்டியுள்ளது.


மாநகர் போக்குவரத்துக் கழகம் இந்த தொகையை வழக்கமாக செலுத்தி வருகிறது. மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிகர ஊதியம் மற்றும் ஓய்வூதியம் சுமார் ரூ. 96 கோடியாகும். போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி கழகத்திடம் (TDFC) ஒவ்வொரு மாதமும் ரூ. 15 முதல் 20 கோடி வரை கடனாகப் பெற்று ஒன்றாம் தேதியன்று தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும், பலவித நிதி ஆதாரங்களை வைத்து எல்.ஐ.சி காப்பீடு உட்பட இதர  பிடித்தங்களுக்கான சந்தாவும் வழக்கமாக செலுத்தப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இத்தொகையை கட்டுவதில் கால தாமதம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் எல்.ஐ.சி நிறுவனத்திடம் பேசி மாதாந்திர நிலுவை தொகை மூன்று அல்லது நான்கு மாத கால அவகாசத்தில் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எல்.ஐ.சி நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது. இவை அனைத்துமே அனைத்து தொழிலாளர்களுக்கும் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது.


கடந்த 2019, நவம்பர் மாதம் முதல் 2023, டிசம்பர் மாதம் வரை மாநகர் போக்குவரத்துக் கழகம் எல்.ஐ.சி காப்பீடு கட்டியதற்கான விவரங்கள் இத்துடன் இணைக்கப்படுகிறது. மேலும் இது போன்ற தாமதத்தை தவிர்க்க மாநகர் போக்குவரத்துக் கழகம், அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இதில் முறைகேடு நடப்பதாக தொழில்நுட்பப் பணியாளர் துளசிதாஸ் 04.05.2024 அன்று உதவி மேலாளருக்கு (சம்பள பட்டியல் பிரிவு) எல்.ஐ.சி காப்பீடு குறித்து மனு அளித்திருந்தார். மனு மீதான விளக்கமும் அவரிடம் அளிக்கப்பட்டது.  இருந்த போதிலும் துளசிதாஸ் (தொழில்நுட்பப் பணியாளர்) காவல்துறையில் உதவி மேலாளர் (சம்பளப் பட்டியல் பிரிவு) மீது அவதூறாக புகார் அளித்துள்ளார்.  இந்த சம்பந்தப்பட்ட உதவி மேலாளர்  பணிமனைகளில் இருந்து பெறப்படும் வருகை பதிவின் படி சம்பள பட்டியல் தயார் செய்வது தொடர்பான பணியினை செய்து வருகிறார்.  எல்.ஐ.சி-க்கு செலுத்த வேண்டிய தொகையை சம்பந்தப்பட்ட பணியாளரின் சம்பளத்திலிருந்து கணக்கிடுவதுடன் அவரது பணி முடிவுறும். பணம் செலுத்துவது அவருடைய பணி அல்ல.


இவை அனைத்தும் தெரிந்தும் உதவி மேலாளர் (சம்பள பட்டியல் பிரிவு) மீது உள்ள தனிப்பட்ட நோக்கத்தினால் குற்றம் சாடியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.


துளசிதாஸ் இதுதொடர்பாக   ஊடகத்தில் காண்பித்த ஆதாரங்கள் எல்.ஐ.சி-யில் நவம்பர்-2023-க்குரிய மாதாந்திர சந்தா தொகை 15.04.2024 அன்று சரி செய்யப்பட்டது என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைத்தான் அவர் தவறாக எல்.ஐ.சி-யில் இருந்து நோட்டீஸ் பெறப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கூறியிருக்கிறார் என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.