சென்னை பீச்-தாம்பரம்- ரயில் சேவை மாற்றம்.. தேவைக்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் - MTC அறிவிப்பு!

Su.tha Arivalagan
Jul 22, 2024,09:51 PM IST

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கு செல்லும் 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதால், கூடுதல் சிறப்பப் பேருந்துகள் தேவைக்கேற்ப இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.


முன்னதாக ரயில்வேயின் கோரிக்கையைை ஏற்று கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்திருந்தது. பயணிகளுக்கு அசவுகரியம் ஏற்படாத வகையில் பல்வேறு சேவைகளையும் மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்திருந்தது.




ஆனால் தற்போது தெற்கு ரயில்வே தனது திட்டத்தை மாற்றி விட்டது. புதிய திட்டத்தையும் அது அறிவித்துள்ளது. இதனால் மாநகர போக்குவரத்துக் கழகமும் தனது திட்டத்தை திருத்தியுள்ளது. 


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தில் தாம்பரம் யார்டின் பராமரிப்பு பணிகளுக்காக நாளை முதல் ரத்து செய்யப்பட்டிருந்த பகல் நேர புறநகர் ரயில் சேவைகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை வழக்கமான கால அட்டவணையின் படி இயக்கப்படும். இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 2:30 மணி வரை மட்டும் புறநகர் ரயில் சேவைகள் முன்பு அறிவித்தது போலவே இயங்காது. அதற்கு மாறாக சிறப்பு பயணிகள் ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்பதால் மாநகர போக்குவரத்து கழகம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்த சிறப்புப் பெருந்துகள் தேவையின் அடிப்படையில் இயக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.