காலில் ஏற்பட்ட வலிக்கு லண்டனில் சிகிச்சை.. கிளம்பத் தயாராகிறார் தோனி

Meenakshi
May 21, 2024,01:31 PM IST

டெல்லி:  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது கால் வலி சிகிச்சைக்காக லண்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக  5 முறை கோப்பையை வென்ற தோனி, 17வது சீசனில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதில், ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தோனி தனது 41 வயதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎஸ் போட்டி தோனியின் கடைசி தொடராக கருதப்பட்டது. இந்த தொடர் முழுவதும் கடைசி நேரத்தில் தோனி களம் இறங்கினார். கடைசி லீக் போட்டியில் அவர் அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்.




சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு இடம் பெறத் தவறியதைத் தொடர்ந்து ராஞ்சி சென்ற தோனி, அங்கு பைக்கில் ரைடு சென்ற காட்சி இணையத்தில் பரவி வைரலாகியது. இந்நிலையில்,  காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக தோனி விரைவில் லண்டன் செல்ல இருப்பதாகவும், லண்டனில்  அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவி தோனி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


விரைவில் லண்டன் செல்ல தோனி தயாராகி வருகிறாராம். தற்போது தோனி முழு உடல் தகுதியுடன் இல்லை. அறுவை சிகிச்சை முடிந்து குறைந்தது 6 மாதங்களுக்கு பின்னர் தான் தோனியின் உடல் நிலை சரியாகும் என்றும் சொல்லப்படுகிறது.