தல, தல தான்... இளம் வீரர்களை மனம் திறந்து பாராட்டும் தோனி... ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து

Su.tha Arivalagan
Mar 24, 2025,05:12 PM IST

சென்னை : சீனியர் வீரர், உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக இருந்தாலும் தற்போது புதிதாக கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருக்கும் திறமையான இளம் வீரர்களை ஓப்பனாக மனம் திறந்து பாராட்டும் தோனியின் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.


தற்போது 2025 ம் ஆண்டிற்கான ஐபிஎல் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டி தொடர் துவங்கி, நடந்து வருகிறது. இதில் நான்காவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


சென்னை அணி, 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தான் தல தோனி களத்தில் இறங்கினார். ரசிகர்களின் ஆரவாரத்துடன் தோனி களம் இறங்கினாலும் 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு, ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. ஆனால் ரவீந்திர ஜடேஜா  அவுட் ஆனதும் மைதானத்திற்குள் வந்த தோனி, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி, 32 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை எடுத்த விக்னேஷ் புதூரை தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.




விக்னேஷ், விளையாடிய முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி, முதல் ஐபிஎல் போட்டியும் நேற்று நடைபெற்றது தான். இருந்தாலும் ருதுராஜ், சிவம், தீபக் என சென்னை அணியின் மூன்று பெரிய விக்கெட்களை அடுத்தடுத்து சரித்து, புயல் வேகத்தில் ரன் குவித்த சென்னை அணியின் ஸ்கோருக்கு பெரிய ஸ்பீட் பிரேக் போட்டார் விக்னேஷ். முதல் போட்டியிலேயே அனைவராலும் கவனிக்கப்படும் வீரராக மாறிய விக்னேஷை மைதானத்தில் வைத்து தோனி பாராட்டியது பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.


அதே போல், தீபக் சகர் தற்போது மும்பை அணிக்காக விளையாடுகிறார். இதற்கு முன் இவர் சென்னை அணிக்காக விளையாடி வந்தார். தற்போது வேறு அணிக்கு மாறினாலும் தோனி, தீபக்கின் நல்ல உறவு இன்னும் தொடர்கிறது என்பதும் நேற்றைய போட்டியில் வெளிப்பட்டது. போட்டி முடிந்து மும்பை அணி வீரர்களுக்கு வரிசையாக கைகொடுத்த தோனி, தீபக் சகர் அருகில் வந்ததும் தன்னுடைய பேட்டால் செல்லமாக அடித்து விளையாடினார். 


உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கும் தோனி, எந்த ஈகோவும் இல்லாமல் இளம் வீரர்களை தானே சென்று மைதானத்திலேயே வைத்து பாராட்டுவது, அவர்களுடன் நல்ல உறவுடன் இருப்பதும் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதை விட முக்கியமாக நேற்றைய போட்டியில் வெறும் 4 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் களத்திற்கு வந்தார் தோனி. அதை அவரே அடித்திருக்க முடியும். ஆனால் நேற்றைய போட்டியில் பிரமாதமாக ஆடிய ரச்சின் ரவீந்திராவே வின்னிங் ரன்னையும் எடுக்க அவர் வழி விட்ட விதம் பாராட்டுக்களை வாரிக் குவித்து விட்டது.


ரசிகர்களிடம் இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விக்னேஷிற்கு ஒரு புறம் பாராட்டு தெரிவித்தாலும், தோனியின் செயலுக்காக அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.