தாயின் அன்பு என்ன செய்யும்.. பிரக்ஞானந்தாக்களை உயர்த்திப் பிடிக்கும்!

Su.tha Arivalagan
Aug 25, 2023,04:49 PM IST
சென்னை: கடந்த சில நாட்களாக பிரக்ஞானந்தாவின் தாயாரின் புகைப்படம்தான் எல்லோராலும் அதிகம் பார்த்து நெகிழந்த புகைப்படமாக இருக்கும். அந்த அளவுக்கு அந்தத் தாயார் அத்தனை பேருக்கும் மிகப் பெரிய ஊக்க சக்தியாக மாறியுள்ளார்.

நாகலட்சுமி.. இப்படி ஒரு தாய் இருந்தால் உலகத்தையே எட்டிப் பிடித்து விடலாம்.. எத்தனை தூர பயணம் இது.. எத்தனை சிரமமான போராட்டங்களைக் கடந்து வந்த பாதை இது.. அத்தனையிலும் தன்னை மெழுகுவர்த்தி போல தியாகம் செய்து தனது மகனை ஒளிர வைத்து ஓரமாக நின்று கண்கள் கசிய மகிழ்ந்து நிற்கிறார் நாகலட்சுமி.

மனிதர்களையும் உலக உயிர்களையும் படைப்பது கடவுள்தான் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த உண்மையே. ஆனால் இந்த உலக உயிர்களை பிரசவத்தின் வாயிலாக இந்த பூமிக்கு கொண்டு வருவது தாய் மட்டுமே. அந்தத் தாயின் ஈடில்லா அன்புக்கு நிகர் எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட தியாகத்திற்கு சான்றாக திகழ்கிறார் நாகலட்சுமி.

இளம் செஸ்  சாம்பியன் பிரக்ஞானந்தாவின் தாயார்தான் நாகலட்சுமி. தனது மகனையும், மகளையும் அவர்களது செஸ் திறமையை அறிந்து இளம் வயதிலிருந்தே அவர்கள் சாதிப்பதற்காக தான் ஓட ஆரம்பித்தவர். ஓடி ஓடி இரு பிள்ளைகளுக்கும் ஒளி கிடைப்பதற்கான வழிகளை பார்த்துப் பார்த்து உருவாக்கியவர்.. தேடித் தேடிப் போய் அவர்களுக்கான தளங்களை அமைத்துக் கொடுத்தவர்.



பிரக்ஞானந்தாவுக்கு இப்போது 18 வயதாகிறது. தந்தை ரமேஷ்பாபு தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். பிரக்ஞானந்தாவுக்கு வைசாலி என்ற அக்காவும் உள்ளார். இவரும் செஸ் கிராண்ட் மாஸ்டர்தான். பிரக்ஞானந்தா பன்னிரண்டாம் வகுப்பை படித்து முடித்துள்ளார். தன்னுடைய அக்கா செஸ் விளையாடிய காரணத்தால் இவரும் மூணு வயது முதலே செஸ் விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்தார்.

வேலம்மாள் பள்ளியில் பயின்றி பிரக்ஞானந்தாவுக்கு பள்ளி நிர்வாகம் நல்ல ஒத்துழைப்பு கிடைத்தது. அத்தோடு தாயார் நாகலட்சுமியின் அர்ப்பணிப்பும் பிரக்ஞானந்தாவுக்கு நிறைய உதவியாக இருந்தது. தனது மகனின் கூடவே இருப்பார் நாகலட்சுமி. அவரது திறமை மேலும் வளர்வதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து விட்டார் நாகலட்சுமி.



குழந்தை வளர்ப்பில் ஒரு தாயின் பங்கு  மிகப் பெரியது. குழந்தையின் அழுகுரல் கேட்டாலே தாய் மனம் பதறிப் போய் ஓடி வரும். அனைத்து தாயார்களுக்கும் தான் பெற்ற பிள்ளையை இந்த உலகம் வியக்கும் வண்ணம் உருவாக்க வேண்டும் என்பதுதான் கனவாக இருக்கும். நாகலட்சுமியைப் பொறுத்தவரை பிரக்ஞானந்தாதான் உலகம்.. அவர்தான் கனவும் கூட. அவரது அயராத ஒத்துழைப்பு, ஆதரவு, உறுதுணை, உழைப்பு ஆகியவற்றால்தான் இன்று தனது மகனை உச்சத்தில் நிறுத்தி பார்த்து சாதனை படைத்துள்ளார் நாகலட்சுமி.

பிரக்ஞானந்தா கலந்து கொண்ட ஒவ்வொரு போட்டிகளிலும் கூடவே இருந்து உறுதுணையாக இருந்தவர் நாகலட்சுமி.  தனது மகனுக்கு முதுகெலும்பு போல இருந்ததால் பத்து வயதிலேயே பிரக்ஞானந்தா இளைய சர்வதேச செஸ் மாஸ்டர் மற்றும் 2018 ஆம் ஆண்டு அவர் உலகின் இரண்டாவது இளைய செஸ் கிராண்ட் மாஸ்டர் என்றும் சாதனை படைக்க முடிந்தது.

உலகக் கோப்பை போட்டி சமயத்தில், ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே மகனை கூடுதல் கவனத்துடன் கவனித்துக் கொண்டாராம் நாகலட்சுமி.  மேலும் போட்டியின்போது அவர் மகனின் வெற்றிக்காக காத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பலரும் நெகிழ வைத்து விட்டது. தாயின் சக்தி எத்தனை பெரியது என்பதை அது உணர்த்தும் வகையில் அமைந்தது.



தனது தாயார் குறித்து  பிரக்ஞானந்தா கூறுகையில் ,"என் அம்மாவின் சக்தி அபாரமானது. அம்மா அதை இழக்கவே இல்லை. எங்கள் பெற்றோர்தான் எனக்கு பெரும் ஆதரவு" என்று கூறியுள்ளார்.  உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு, செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு முன்னேறிய முதல் இந்தியர் பிரக்ஞானந்தாதான். அதுவும் 18 வயதில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். 

பிரக்யானந்தா முன்னேறியதற்கு அவரது திறமை முதல் காரணம் என்றால் அந்தத் திறமை எந்த இடத்திலும் தொய்வடைந்து விடாமல் கூடவே இருந்து அக்கறை காட்டி, ஆதரவு காட்டி, ஊக்கம் கொடுத்து ஊன்று கோலாய் நிற்கும் அவரது தாயாரும் மிக முக்கியமான காரணம் என்பதில் சந்தேகமே இல்லை.