Employment.. மாமியார்களால் உயர்வு பெறும் மருமகள்கள்.. ஒரு சுவாரஸ்ய ரிப்போர்ட்!

Su.tha Arivalagan
Sep 24, 2023,02:34 PM IST

சென்னை: மாமியார் என்றால் ஒரு காலத்தில் மருமகள்கள் பயப்பட செய்தார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அதிலும்  வேலை பார்க்கும் மாமியார்களால் பெரிய அளவில் மருமகள்களுக்கு உயர்வு கிடைத்துள்ளதாக ஒரு சுவாரஸ்ய சர்வே தெரிவித்துள்ளது.


முன்பெல்லாம் பெண்கள் வேலை பார்ப்பது என்பது மிக மிக அரிதான விஷயமாக இருந்தது. படித்து முடித்த பின்னர் கணவர் விட்டில் செட்டிலாகும் பெண்கள் அங்கு வீட்டு வேலை செய்தும், மாமியார், மாமனார் அவர்களது குடும்பத்தினருக்குப் பனிவிடை செய்தும்தான் வாழ்க்கையைக் கழித்து வந்தனர்.


ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. பெண்களும் இப்போது பெருமளவில் வேலைக்குப் போகின்றனர். கை நிறைய சம்பாதிக்கின்றனர். குடும்பத்தின் முக்கிய தூணாக மாறியுள்ளனர். வேலைக்குப் போகாத பெண்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இன்று பெண்கள் வேலை பார்த்து சம்பாதிக்கின்றனர்.


இந்த நிலையில் பெண்களின் வேலைவாய்ப்பு குறித்து ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் ஒரு வித்தியாசமான தகவல் கிடைத்தது. அதாவது எந்தெந்த வீட்டில் எல்லாம் மாமியார்கள் வேலை பார்க்கிறார்களோ அந்த வீட்டில் எல்லாம் மருமகள்களும் வேலைக்குப் போகிறார்கள் அல்லது வேலை பார்க்க ஊக்குவிக்கப்படுகிறார் என்பதே அந்த சுவராஸ்யத் தகவல்.




வேலை பார்க்கும் மாமியார்களால் வேலைக்குப் போக ஊக்குவிக்கப்படுகிறார்கள் பெண்கள் என்று இந்த சர்வே சொல்கிறது. அதாவது கிட்டத்தட்ட வேலை பார்க்கும் நகர்ப்புற மாமியார்கள் உள்ள வீடுகளில் 70 சதவீத மருமகள்கள் வேலை பார்ப்பவர்களாக உள்ளனராம். இதில் கிராமப்புற கணக்கு 50 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்தான் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாமியார்களும் முன்பு போல இல்லை. மருமகள்களை மிரட்டி உருட்டுவது, அல்லது வேலைக்காரி போல டீல் செய்வது எல்லாம் இப்போது அடியோடு  காணாமல் போய் விட்டதாம். மருமகள்களை ஊக்குவிப்பதிலும், அவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதிலும் மாமியார்கள் முன்னிலை வகிக்கிறார்களாம். பெண்கள் வேலைக்குச் செல்வதன் முக்கியத்துவத்தையும் மருமகள்களுக்கு மாமியார்களே எடுத்துரைத்து அவர்களை ஊக்குவிக்கிறார்களாம்.


கொரோனா வந்த பிறகு பெண்கள் சுய தொழில் செய்வது அதிகரித்து விட்டது. கொரோனாவுக்கு முன்பு 50 சதவீத பெண்கள்தான் சுய தொழில் செய்து வந்தனர். அது தற்போது 60 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.