அடுத்த 3 மணி நேரத்தில்.. சென்னை உள்பட 29 மாவட்டங்களில் மழை தொடரும்.. வானிலை மையம்

Su.tha Arivalagan
Jan 08, 2024,08:08 AM IST

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 29 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே நேற்று முதல் விட்டு விட்டு இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.


தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பல இடங்களிலும் நேற்று கன மழை கொட்டித் தீர்த்தது. அதேபோல விழுப்புரத்திலும் இரவு முழுவதும் கன மழை கொட்டியது. இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.




செங்கல்பட்டு மாவட்டத்தில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் இதே நிலைதான். ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. 


புதுச்சேரியிலும், காரைக்கால் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் இடைவிடாமல் மிதமான மழை பெய்து வருவதால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


29 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை




இதற்கிடையே, 29 மாவட்டங்களில் பத்து மணி வரை மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. 


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.


ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தொடர் மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் நீர் சேர்ந்துள்ளது. இருப்பினும் பெரிய அளவிலான வெள்ளப் பெருக்கு எங்கும் இதுவரை ஏற்படவில்லை.