மார்னி மார்க்கலுக்குப் புது வேலை.. டீம் இந்தியாவில் இணைகிறார்.. கம்பீர் கொடுத்த அசைன்மென்ட்!

Su.tha Arivalagan
Aug 14, 2024,05:31 PM IST

மும்பை:  தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் பந்து வீச்சாளரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சுப் பயிற்சியாளருமான மார்னி மார்க்கல், இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராகிறார்.


தென் ஆப்பிரிக்காவின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் மார்னி மார்க்கல். சிறந்த வேகப் பந்து வீச்சாளர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்பு விளையாடிய ஆல்பி மார்க்கலின் சகோதரர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை அணியில் பந்து வீச்சுப் பயிற்சியாளராக செயல்பட்டவர். தற்போது அவர் இந்திய அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக இணைகிறார்.




இந்த செய்தியை இந்திய கிரிக்கெட் அணியின் செயலாளர் ஜெய்ஷா உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் ஐபிஎல் அணிகளுடனும் இணைந்து செயல்பட்டுள்ளார் மார்னி மார்க்கல். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளில் அவர் பந்து வீச்சுப் பயிற்சியாளராக இருந்துள்ளார். கொல்கத்தா அணியில் இருந்தபோது அதன் கேப்டனாக இருந்தவர் கம்பீர் என்பது நினைவிருக்கலாம்.


39 வயதேயாகும் மார்னி மார்க்கல், கம்பீரன் முதல் சாய்ஸ் ஆவார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலும் இருவரும் இணைந்து செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 86 டெஸ்ட் போட்டிகள், 117 ஒரு நாள் போட்டிகள், 44 டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவுக்காக ஆடியுள்ளார் மார்னி மார்க்கல். மொத்தம் 544  விக்கெட்களையும் அவர் வீழ்த்தியுள்ளார்.


இந்திய  அணியின் பந்து வீச்சு இலங்கையில் திருப்திகரமாக இல்லை. இதனால் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சை சரி செய்யும் முக்கியப் பணி மார்னி மார்க்கல் முன்பு காத்திருக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்