வரிந்து கட்டிக் கொண்டு.. அரசியலில் குதிக்கும் ஆந்திர தலைவிகள்!

Meenakshi
Oct 02, 2023,02:55 PM IST

- மீனாட்சி


விஜயவாடா: ஆந்திர மாநில அரசியலில் பெண்களின் ஆதிக்கம் தற்பொழுது அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து பெண் தலைவிகள் அதிகரித்து வருவதால் அந்த மாநில அரசியல் களை கட்டத் தொடங்கியுள்ளது.


நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு  33 சதவீத இட ஒதிக்கீட்டு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் ஆந்திர அரசியலில் பெண்களின் பங்கு அதிகரித்து வருவது ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மற்றொறுபுரம் என்னெல்லாம் நடக்கப் போகுதோ என்பதும் புதிராகவே இருக்கிறது.




ஆந்திர மாநில அரசியலைப் பொறுத்தவரை ஆண் தலைவர்கள்தான் அதிகம். அந்தக் காலத்தில் என்டிஆர் சூப்பர் ஸ்டார் தலைவராக இருந்தார். பின்னர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி வந்தார், சந்திரபாபு நாயுடு வந்தார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா உருவெடுத்தது போல பெண் தலைவர்கள் யாரும் ஆந்திராவில் கோலோச்சியதில்லை.


இந்த நிலையில் சமீப காலமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிக அளவிலான பெண் தலைவர்கள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆந்திர மாநில பாஜக தலைவராக சமீபத்தில் புரந்தேஸ்வரி நியமிக்கப்பட்டார். இவர் மறைந்த தெலுங்கு தேச கட்சியின் நிறுவனர் என்டிஆரின் மகள் ஆவார்.  அதேபோல ஆந்திரமாநில முதல்வர் ஒய்.எஸ்.ஆர் ஜெகன்மோகன்ரெட்டியின் தங்கை சர்மிளா தெலுங்கானவில் தனி கட்சி ஆரம்பித்து அரசியல் நடத்தி வருகிறார்.  


ஆந்திராவைப் பொறுத்தவரை நடிகை ரோஜா அதிரடியாக அரசியல் செய்து வருகிறார். இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அமைச்சராகவும் உள்ளார். சந்திரபாபு நாயுடுவை விடாமல் துரத்தி துரத்தி விமர்சித்து வருபவர் ரோஜா. இந்த நிலையில் மேலும் இரு பெண் தலைவர்கள் ஆந்திர அரசியலை கலக்கப் போகிறார்கள்.




ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ள நிலையில்,  மகன் லோகேஷ் மீது சி.ஐ.டி போலீஸ் விசாரித்து வருவதால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது.  இன்னும் சில மாதங்களில் ஆந்திரா மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், நிலைமையை சமாளிக்க தங்கள் வீட்டுப் பெண்களை அரசியலில் இறக்க  அவர்கள் திட்டமிட்டுள்ளனராம்.


அந்த வகையில், என்டிஆர் மகளும், சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான புவனேஸ்வரி, சந்திரபாபு நாயுடுவின் மருமகள் பிராமணி  (லோகேஷின் மனைவி) ஆகியோர் கட்சிக்குத் தலைமை தாங்கி வழி நடத்தப் போவதாக சொல்கிறார்கள்.


சந்திரபாபு நாயுடு எதிராக ஆந்திர முதல்வர் அடக்கு முறையை  கையாள்வதாக ஏற்கனவே சர்ச்சை உள்ள நிலையில் அதை சமாளிக்கவும் அனுதாபத்தின் மூலம் வாக்குகளை சிதறாமல் ஒன்று சேர்க்கவும், புவனேஸ்வரி, பிராமணி ஆகியோரின் அரசியல் வருகை உதவும் என்று தெலுங்கு தேசம் நம்புகிறது. 


இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகுதோ.. ஆனால் கண்டிப்பாக ஆந்திர அரசியலில் இன்னும் காரம் அனல் பறக்கும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.