கேரளாவில்.. "ஹவுஸ் போட்" ஆற்றில் கவிழ்ந்து அசம்பாவிதம்.. 22 பேர் பரிதாப மரணம்

Su.tha Arivalagan
May 08, 2023,09:23 AM IST
மலப்புரம்: கேரளாவில் தூவல் தீரம் ஆற்றில் இரண்டு அடுக்கு ஹவுஸ் போட் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியானார்கள். அதில் பலரும் குழந்தைகள் என்பது கொடுமையானது.

அந்த ஹவுஸ் போட்டில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. மலப்புரம் மாவட்டம் தானூர் பகுதியில் நேற்று இரவு இந்த விபத்து நடந்தது.  7 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





தீயணைப்புப் படையினர், காவல்துறையினர், உள்ளூர் பொதுமக்கள் என பலரும்சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். படகு விபத்துக்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பினராயி விஜயனும் இந்த சம்பவம் குறித்து வேதனையும், இரங்கலும் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று காலை அவர் தனூர் செல்கிறார். அவரது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் இதற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் கேரள விளையாட்டு அமைச்சர் அப்துர் ரஹிமான், சுற்றுலாத்துறை அமைச்சர் முகம்மது ரியாஸ் ஆகியோர் முகாமிட்டு மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வந்தனர். அவர்கள் கூறுகையில், ஹவுஸ்போட்டில் ஏராளமான குழந்தைகள் இருந்துள்ளனர். பள்ளி விடுமுறைக்காலம் என்பதால் சுற்றுலா வந்தவர்கள் அவர்கள் என்று தெரிவித்தனர்.