அமெரிக்காவை உலுக்கும் பனிப் புயல்.. 9 மாகாணங்கள் பாதிப்பு.. 50க்கும் மேற்பட்டோர் பலி

Su.tha Arivalagan
Jan 19, 2024,03:13 PM IST

நியூயார்க்: அமெரிக்காவில் கடும் பனிப் புயல் வீசி வருகிறது. இதில் ஒன்பது மாகாணங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுவரை பனிப்புயலுக்கு 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


அடுத்து வரும் நாட்களில் பனிப் புயல் மேலும் அதிகமாக இருக்கும் என்றும், மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஒரே வாரத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் டென்னசி மாகாணத்தில் பனிப் புயலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.


பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை இந்த மாகாணங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் கார் விபத்து உள்ளிட்ட பல்வேறு விபரீத சம்பவங்களும் நடந்து உள்ளன. ஓரிகான் மாகாணத்தில் ஒரு மின் கம்பம் கீழே விழுந்ததில் மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அதேபோல போர்ட்லான்ட்  நகரில் காரில் வந்து கொண்டிருந்தபோது அந்தக் கார் விபத்துக்குள்ளானது. அதில் இருந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். ஒரு குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. 




பென்சில்வேனியா மாகாணத்தில் ஒரு டிராக்டர் - மினி வேனுடன்  மோதி விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் பலியானார்கள். இந்த ஐந்து பேரும் நியூயார்க்கில் இருந்து வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வந்த மினி வேன் இண்டர்ஸ்டேட் 81 என்ற பகுதியில் வந்தபோது விபத்துக்குள்ளானது.


பனிப்புயல் காரணமாக சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து என எல்லா வகையான பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான விமானங்கள் இந்த பனிப்புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. வடகிழக்கு மற்றும் வட மேற்கு, மத்திய மேற்கு மாகாணங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு பணிப்புயல் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


பனிப்புயல் காரணமாக ஓக்லஹாமா சிட்டி,  நியூயார்க் நகரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பனியில் சூழப்பட்டுள்ளன. சிக்காகோ முதல் பீட்ஸ் பார்க் மாகாணம், வாஷிங்டன், நியூயார்க் வரை பனிப்புயல் கடுமையாக வீசி வருகிறது. பனிப்புயல் காரணமாக ஒரிகான் மற்றும் வாஷிங்டன் நகரங்களில் பேய் மழை பெய்து வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.