அடுத்த 24 மணி நேரத்தில்.. தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!

Meenakshi
Sep 13, 2023,12:42 PM IST
சென்னை:  வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த தாற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்பதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இது வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசாவுக்கும் வடக்கு ஆந்திரப் பிரதேசத்துக்கும் இடையே கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். அடுத்த 24 மணிநேரத்தில், இது மேலும் வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். 

தற்போதைய வானிலை அம்சங்கள், ஒடிசாவில் அடுத்த ஐந்து நாட்களில் கனமழை முதல் மிகக் கனமழையுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பரவலாக பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு  உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்துள்ளது.