வட தமிழ்நாட்டுக்கு செம மழை வெயிட்டிங்ல இருக்கு.. குட் நியூஸ் சொன்ன வெதர்மேன்!

Su.tha Arivalagan
Nov 28, 2023,05:15 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் வட மாவட்டங்களுக்கு வரும் நாட்களில் சூப்பரான மழை காத்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை பார்ட் பார்ட்டா வச்சு வெளுத்துக் கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு மதுரையில் பெய்தால் அடுத்து தூத்துக்குடியில் வெளுக்கிறது. அங்கு முடித்து விட்டு கன்னியாகுமரி.. அப்படியே காவரி டெல்டா.. கூடவே மேற்கு மாவட்டங்கள்.. கொஞசம் வடக்கு என்று வச்சு வச்சு விளையாடிக் கொண்டுள்ளது.


ஆனால் இந்த வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் எந்த மாவட்டத்திலும் பெருவெள்ளமோ, பெரும் பாதிப்போ ஏற்படவில்லை. மாறாக மழை நீர் யாரையும் பெரிதாக பாதிக்காமல் அழகாக பொழிந்து கொண்டிருக்கிறது.




மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. ஏரிகள் நிரம்பியுள்ளன. மக்களுக்கும் இந்த மழையால் மகிழ்ச்சிதான். மேட்டூர் அணை மட்டும்தான் நிரம்பாமல் உள்ளது. அது மட்டுமே கவலையான ஒன்று. மற்றபடி மாநிலம் முழுவதும் வட கிழக்குப் பருவ மழை இந்த முறை யாரையும் ஏமாற்றவில்லை.


இந்த நிலையில் வரும் நாட்களில் அதாவது நாளை முதல் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், இந்த மழைக்காலம் மிக மிக அட்டகாசமாக உள்ளது. தினசரி மழை பெய்கிறது.. அடிக்கடி அதி வேக மழையம் சேர்ந்து பெய்கிறது. நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை மழைப்பொழிவு அதிகரிக்கும். அதன் பிறகு மேலும் அதிகரிக்கும்.


எல்லோருடைய பார்வையும் சக்கரத்தின் மீதுதான் பதிந்துள்ளது. இன்னும்  6 நாட்கள் உள்ளது. அதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சக்கரம் சரியான பாதைக்கு வர இன்னும் 2 நாட்கள் உள்ளது. அது எப்படிப் போனாலும் சரி ஒரு விஷயம் மட்டும் உறுதி,  கண்டிப்பாக வடக்கு தமிழ்நாட்டுக்கு நல்ல மழை காத்திருக்கிறது என்று கூறியுள்ளார் வெதர்மேன்.


சென்னையைப் பொறுத்தவரை டிசம்பர் மாதத்தை மறக்கவே முடியாது.. 2015ம் ஏற்படுத்திய பாதிப்பு மக்களின் மனதிலிருந்து இன்னும் சில தலைமுறைகளுக்கு அகலாது. எனவே இந்த டிசம்பரிலும் அப்படி ஏதும் நடக்குமா என்ற அச்சம் மக்களிடம் உள்ளது. இருந்தாலும் தற்போது பெய்யும் மழையெல்லாம் உடனுக்குடன் வடிந்து விடுவதால் மக்களிடம் தைரியமும், நம்பிக்கையும் அதிகமாகவே உள்ளது. எனவே மழை வரட்டும்.. சந்திக்க மக்கள் ரெடியாத்தான் இருக்காங்க!