நிவின் பாலி மீதான புகாரில் திருப்பம்.. சம்பவம் நடந்தபோது கொச்சியில் இருந்த ஆதாரம் வெளியானது!

Manjula Devi
Sep 06, 2024,12:42 PM IST

கொச்சி: நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் இழைக்கப்பட்டபோது துபாயில் அவர் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நாளில்  கொச்சி படப்பிடிப்பு தளத்தில் இருந்ததாகவும், அங்கு விடுதியில் தங்கி இருந்ததற்கான ரசீதும் வெளியாகி உள்ளது. 


கேரளாவில் சமீபத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி கேரளா திரை உலகையே புரட்டி போட்டுள்ளது. இந்தப் பாலியல் குற்றச்சாட்டுகளில் பல மலையாள இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் சிக்கினார். இந்த நிலையில் நடிகர் நிவின் பாலி மீதும் ஒரு பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 40 வயது பெண் ஒருவர் இதுகுறித்துக் கூறுகையில், ஒரு வருடத்திற்கு முன்பு நிவின் பாலி தன்னை துபாயில் வைத்து பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இதன் பேரில் நிவின் பாலி மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.




நிவின் பாலி மீது ஐபிசி 360 பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நடிகர் நிவின் பாலி தன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றங்கள் அனைத்தையும் மறுத்து தன் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. உண்மைக்கு புறம்பானவை. அதை நிரூபிக்க எந்த எல்லைக்கு வேணாலும் செல்லுவேன் என கூறியிருந்தார்.


இந்த நிலையில் நிவின் பாலிக்கு சாதகமான ஒரு ஆதாரம் வெளியாகியுள்ளது. இதை நடிகரும் இயக்குநருமான வினீத் சீனிவாசன் மற்றும் பகத் மானுவல் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். கொச்சியில் ஒரு ஹோட்டலில் சம்பவம் நடந்தபோது நிவின் பாலி தங்கியிருந்தது தொடர்பான ரசீதை அவர்கள் வெளியிட்டனர். இதுகுறித்து வினீத் சீனிவாசன் கூறுகையில், அப்போது படப்பிடிப்புக்காக நாங்கள் கொச்சியில்தான் தங்கியிருந்தோம். நிவின் பாலி எங்களுடன்தான் இருந்தார் என்று கூறினார் வினீத் சீனிவாசன்.


அவர் மேலும் கூறுகையில், டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்களும் நிவின் பாலி எங்களுடன்தான் இருந்தார். நாங்கள் ஏபிஏடி நியூக்ளியஸ் மாலில்தான் டிசம்பர் 15ம் தேதி அதிகாலை 3 மணி வரைக்கும் தங்கியிருந்தோம்.  அவர் பார்மா வெப் தொடரின் படப்பிடிப்புக்காக வந்திருந்தார். அந்த சமயத்தில் பலரும் படப்பிடிப்பில் பங்கேற்றனர். இதை ஈஸியாகவே கண்டுபிடிக்க முடியும். அந்தப் பெண் கூறிய புகார் உண்மையில்லை என்றார் வினீத் சீனிவாசன்.


இந்த வழக்கின் பின்னணியில் இருப்பவர்களை வெளியில் கொண்டு வருவேன் எனவும் நடிகர் நிதின் பாலி தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்