30 வருஷத்துக்கு முன்னாடி.. பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்தாரா.. நியூயார்க் மேயர்!

Su.tha Arivalagan
Nov 24, 2023,03:26 PM IST

நியூயார்க்: நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் மீது பாலியல் அத்துமீறல் எழுந்துள்ளது. அதாவது 30 வருடங்களுக்கு முன்பு மேயர் ஆடம்ஸ் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக ஒரு பெண் வழக்குத் தொடர்ந்துள்ளார்.


இந்தப் புகாரானது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது. ஆனால் அத்தனை புகார்களையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார் ஆடம்ஸ். நியூயார்க் கோர்ட்டில் இதுதொடர்பாக அந்தப் பெண் ஊழியர் தொடர்ந்துள்ள வழக்கில், 1993 ஆம் ஆண்டு எரிக் ஆடம்ஸ் நியூயார்க் நகரில் வைத்து தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தனக்கு 5 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகையை எரிக் ஆடம்ஸ் தர உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உள்ளார். அந்தப் பெண்ணின் பெயர், அவர் குறித்த விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. 


இதுகுறித்து எரிக் ஆடம்சின் அலுவலக செய்தி தொடர்பாளர் கூறுகையில், மேயருக்கும் புகார் கூறிய நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் யார் என்று தெரியாது. இந்தப் புகார்தாரர் உள்பட வேறு யாரிடமும், மேயர் உடல் ரீதியாக எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை. இந்த பெண் குறித்து எந்த தகவலும் மேயரிடம் இல்லை . அவரைப் பற்றி மேயருக்குத் தெரியாது, நேரில் பார்த்ததும் கிடையாது என்று கூறியுள்ளார். 




மேயர் எரிக் ஆடம்ஸ், ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார். 2022 ஆம் ஆண்டு நியூயார்க் நகர மேயராக பதவி ஏற்றார். நியூயார்க் நகர மேயர் பொறுப்புக்கு உயர்ந்த இரண்டாவது கருப்பர் இனத்தவர் என்ற பெருமை எரிக் ஆடம்சுக்கு உண்டு. இவர் மீது ஏற்கனவே நிதி மோசடி புகார் ஒன்றும் உள்ளது. அது விசாரணையில் இருந்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு மேயர் பதவிக்கான பிரச்சாரத்தின் போது அவர் துருக்கி அரசுடன் இணைந்து கொண்டு நிதி மோசடியில் ஈடுபட்டார் என்பது அந்த வழக்கின் முக்கிய அம்சம்.