கலாஷேத்திரா மாணவிகள் பாலியல் தொல்லை வழக்கில்.. பேராசிரியர் ஹரிபத்மன் கைது

Su.tha Arivalagan
Apr 03, 2023,09:38 AM IST
சென்னை: சென்னை திருவான்மியூர் கலாஷேத்திரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட புகாரில் தேடப்பட்டு வந்த உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலாஷேத்திரா பவுண்டேஷன் சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்லூரி ருக்மணி தேவி நுண் கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு ஆட்படுவதாக புகார்கள் எழுந்தன. இதை எதிர்த்து மாணவிகள் மொத்தமாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.



சில ஆசிரியர்கள் மீது மாணவிகள் புகார் கூறினர். அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதையும் அவர்கள் குமுறலுடன் கூறியிருந்தனர். இந்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத் தலைவர் நேரடியாக சென்னை வந்து விசாரணை நடத்தினார். ஆனால் விவகாரத்தை அவர் மூடி மறைக்க முயல்வதாக சர்ச்சை கிளம்பியது.

இந்த நிலையில் மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி நேரில் வந்து விசாரணை நடத்தினார். அதன் பின்னர் முன்னாள் மாணவி ஒருவர் எழுத்துப் பூர்வமாக காவல் நிலையத்திற்கு நேரில் வந்து புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் போலீஸார் ஹரிபத்மன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.  354ஏ, 506, மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் ஹரிபத்மன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹரிபத்மன் தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வந்த நிலையில்,  தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்து போலீஸார் அவரைக் கைது செய்ததாக கூறப்படுகிறது.