இன்றும் குடை மஸ்ட் பாஸ்.. தமிழ்நாட்டில்.. பரவலாக கனமழை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம்!

Manjula Devi
Jun 07, 2024,10:35 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒரு சில பகுதிகளில் இன்றும்  கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை சுமார் 3 மணி நேரமாக வெளுத்து வாங்கியது. குறிப்பாக மந்தைவெளி, அடையாறு, தாம்பரம், வடபழனி, தியாகராய நகர், அண்ணா நகர், உள்ளிட்ட பல இடங்களில் காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 




இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பரவலாக காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. காலையிலிருந்து ஆங்காங்கே தூறல் மழை தொடர்ந்து வருகிறது.


இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


8 மாவட்டங்களில் கன மழை:


அதன்படி, கோவை திருப்பூர் தேனி திண்டுக்கல் நீலகிரி ஈரோடு கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.


சென்னை, வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.


கன்னியாகுமரியில் சூப்பர் மழை:


ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கடந்த 24 மணி நேரத்தில் 8.8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கடலூரில் 8 சென்டிமீட்டர், அருப்புக்கோட்டை 7 செமீ, நாமக்கல்லில் 6.7செமீ, ராணிப்பேட்டை 6.5 செமீ, உதகை 5.9செமீ மழை பதிவானது. பாளையங்கோட்டை கன்னியாகுமரியில் தலா 5 சென்டிமீட்டர் மழையும், பெரிய குளத்தில் 4.6 சென்டிமீட்டர் மழையும், மாமல்லபுரம், திருப்பத்தூரில் தலா 4.3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 


இது தவிர  திருவள்ளூர் மாவட்டம் திரூர் 4.8 சென்டிமீட்டர்,சேலம் சண்டியூரில் 4.5 செமீ,  மதுரை 4.1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

மேற்கு தாம்பரத்தில் 4.8 சென்டிமீட்டர், சென்னை வில்லிவாக்கத்தில் 2 செமீ,அண்ணா பல்கலைக்கழகப் பகுதியில் 1 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 10.3 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.