வெயிலுக்கு ஒரு குட்டி பிரேக்.. தமிழ்நாட்டில் இன்று முதல் 25ஆம் தேதி வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

Manjula Devi
Mar 19, 2025,06:31 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மதிய வேளைகளில் வெட்கை அதிகரித்துள்ளது. இதனால் தற்போது தேர்வு எழுதும் மாணவர்கள் மதிய வேளைகளில்  பள்ளிக்குச் செல்வதால் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.




இந்த நிலையில், தென் தமிழக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.


இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 25ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.


மேலும் இன்று முதல் 21ஆம் தேதி வரை, தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்புக் குறைவு. மார்ச் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைய கூடும் எனவும் தெரிவித்துள்ளது.