28 வயது குஜராத் மாடல் அழகி தற்கொலையால் மரணம்.. சிக்கலில் ஐபிஎல் கிரிக்கெட் வீரர்!

Su.tha Arivalagan
Feb 22, 2024,06:25 PM IST
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 28 வயதான மாடல் அழகி தன்யா சிங் என்பவர் தனது வீட்டில் தூக்குப் போட்டு தனது வாழ்க்கையை  முடித்துக் கொண்டுள்ளார். இந்த வழக்கில் துப்பு துலங்காமல் போலீஸார் குழம்பிக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஐபிஎல் வீரர் அபிஷேக் சர்மா என்பவரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட ஆரம்பித்துள்ளது.

மாடல் அழகியாகவும், பேஷன் டிசைனராகவும் வலம் வந்தவர் தன்யா சிங். 28 வயதான இவர் தனது பெற்றோருடன் சூரத்தில் வசித்து வந்தார். சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர், ஏகப்பட்ட பாலோயர்கள் இவருக்கு உள்ளனர். ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, வித்தியாசமான வீடியோஸ் போடுவது, புகைப்படங்களைப் போடுவது என்று இன்ஸ்டாகிராமில் பிசியாக இருப்பார் தன்யா சிங்.

திங்கள்கிழமையன்று காலை அவர் வழக்கம் போல எழவில்லை. இதையடுத்து அவரது தந்தை பன்வார் சிங், தன்யாவின் படுக்கை அறைக் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் காணப்பட்டார். தற்கொலை குறித்து எந்த குறிப்பையும் அவர் விட்டுச் செல்லவில்லை. இந்த மரணம் தொடர்பாக போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ள நிலையில் ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது.





அதாவது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியில் விளையாடி  வரும் அபிஷேக் சர்மா என்பவருக்கும், தன்யா சிங்குக்கும் தொடர்பு இருந்துள்ளது. சமீபத்தில் தன்யாவின் செல்போன் எண்ணை பிளாக் செய்துள்ளார் அபிஷேக் சர்மா. மேலும் அவருக்கு தன்யா அனுப்பிய ஒரு வாட்ஸ் ஆப் தகவலையும் அவர் பதிலளிக்காமல் விட்டுள்ளார். இந்தத் தகவல் போலீஸாரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தன்யாவுக்கும், அபிஷேக்குக்கும் இடையே என்ன மாதிரியான நட்பு இருந்தது, தன்யாவின் செய்திக்கு ஏன் அபிஷேக் பதிலளிக்கவில்லை , ஏன் நம்பரை பிளாக் செய்தார் என்பது குறித்து போலீஸார் குழப்பமடைந்துள்ளனர். இதுகுறித்து அபிஷேக்கிடமே விசாரணை நடத்தி விளக்கம் பெறவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இருவருக்கும் இடையே செல்போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்ட தகவல்கள் குறித்து தடயவியல் ஆய்வையும் நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.