பொள்ளாச்சி, கொடநாடு வழக்கில் நீங்க என்ன செஞ்சீங்க?.. ஆவேசமடைந்த முதல்வர் ஸ்டாலின்

sahana
Apr 21, 2023,09:14 AM IST
சென்னை: ‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீங்க என்ன செஞ்சீங்க? நாங்க வந்துதான் நடவடிக்கை எடுத்துட்டு இருக்கோம்’ என சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை பார்த்து ஆவேசமாக பதிலளித்தார்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: 

தவறுகள் நடைபெறுவது இயல்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்; வழக்கு போட்டு இருக்கிறோம், திமுக.,வினர் மீதே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கவேண்டாம். பிரச்னையை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியோட கடமைதான்; ஆனால் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு தெரிவிக்க வேண்டாம், ஆதாரத்தோடு பேசுங்க பதில் சொல்றேன். 



பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீங்க (பழனிசாமி) என்ன செஞ்சீங்க? நாங்க வந்துதான் நடவடிக்கை எடுத்துட்டு இருக்கோம். தூத்துக்குடியில் 100 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்தியபோதும் அப்போதைய முதலமைச்சரோ, அமைச்சர்களோ அவர்களை அழைத்து பேசவில்லை. ஆனால், தடை செய்யப்பட்ட பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறுகின்றனர்.

கொடநாடு கொலை வழக்கில், குற்றவாளி சையான், சிறையில் இருந்து விடுதலையான அன்று, சிறை அதிகாரியிடம் அதிமுக ஆட்சியில் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ளார். இந்த வழக்கை புலன் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தனிப்படை, ஏற்கனவே விசாரணை செய்த சாட்சிகள் மற்றும் புதிய சாட்சிகளை விசாரித்ததில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், சாட்சியங்களை மறைத்த காரணங்களுக்காகவும் இறந்தபோன கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் ரமேஷ் 2021ல் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டது. 

சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த சம்பவம் நடந்ததும் உடனடியாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, தடயங்களை காப்பாற்றி வாக்குமூலத்தை முறையாக பெற்று வைத்திருந்தால், வழக்கை விரைந்து முடித்திருக்க முடியும். தற்போது சில ஆண்டுகள் ஆகிவிட்டதால் சில விஷயங்களை முழுமையாக வெளிக்கொண்டுவர தாமதம் ஏற்படுகிறது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் நடைபெற்ற விவகாரம் என்பதால் மிகுந்த கவனத்துடன் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளியை நிச்சயம் கண்டுபிடிப்போம். எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு நாளைய கூட்டத்தொடரில் (இன்று) விரிவாக பதிலளிக்கிறேன். அதுவரை எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்யாமல் இருந்தால் கேட்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.