நான் பெரிய ஃபேன்.. தமிழ்நாட்டின் தத்துப் புதல்வன் தோனி..  ஸ்டாலின் புகழாரம்!

Su.tha Arivalagan
May 09, 2023,11:17 AM IST
சென்னை: நான் எம்எஸ் தோனியின் மிகப் பெரிய ரசிகர். தமிழ்நாட்டின் தத்துப் புதல்வர்தான் தோனி. அவர் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் டிரஸ்ட் மற்றும் முதல்வர் கோப்பை போட்டி தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில் முதல்வர்  மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் கோப்பை போட்டிகளுக்கான லோகோ இந்த நிகழ்ச்சியின்போது வெளியிடப்பட்டது. நீலகிரி வரையாடு லோகோவாக வடிவமைக்கப்பட்டு அதற்கு வீரன் என்ற பெயரும் இடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் முதல்வர்  ஸ்டாலின் பேசுகையில், நான் தோனியின் மிகப் பெரிய ரசிகன். சமீபத்தில் 2 முறை நான் சேப்பாக்கம் மைதானத்திற்குப் போயிருந்தேன். தோனியின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே போனேன்.  எல்லாத் தமிழர்களும் தோனியின் ரசிகர்கள்தான். தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையாக, தத்துப் பிள்ளையாக இருப்பவர் தோனி. அவர் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து விளைாடுவார் என நம்புகிறேன்.

மிகவும் எளிமையான பின்னணியிலிருந்து வந்த தோனி இன்று தேசிய அடையாளமாக விளங்குகிறார். கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார். அதனால்தான் இன்று அவர் இந்த தொடக்கத்தின் தூதராக வந்திருக்கிறார். நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து நிறைய தோனிகளை உருவாக்க விரும்புகிறோம்,  கிரிக்கெட்டில் மட்டுமல்ல அனைத்து விளையாட்டுகளிலிருந்தும் என்று முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் முதல்வர் மு.க.ஸ்டாலினைப் போலவே, தோனியும் கடின உழைப்பால் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் என்று புகழாரம் சூட்டினார்.