கார் கூட இல்லாத நிர்மலா சீதாராமன்.. புதிய சாதனையுடன் மீண்டும் அமைச்சர்.. நிதித்துறை கிடைக்குமா?

Aadmika
Jun 09, 2024,10:29 PM IST

டில்லி : மோடி தலைமையிலான அமைச்சரவையில் டாப் 10 தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பவர் நிர்மலா சீதாராமன். இந்த முறையும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் நிதித்துறை அவரிடமே ஒப்படைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


மதுரையில் எம்.ஏ., எக்கனாமிக்ஸ், டில்லியில் எம்.ஃபில்., பட்டம் பெற்ற தமிழகத்தை சேர்ந்த பெண்மணியான நிர்மலா சீதாராமன், மறைந்த பாஜக தலைவர் அருண் ஜெட்லியால் அடையாளம் காட்டப்பட்டவர். ஆர்எஸ்எஸ் பின்புலம் ஏதும் இல்லாமல் அரசியலில் வந்து, இன்று மோடியின் நம்பிக்கையை பெற்ற குறிப்பிட்ட சிலர் தலைவர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். பாஜக.,வின் செய்தி தொடர்பாளர், தேசிய மகளிர் அணி உறுப்பினர், பொருளாதார இணையமைச்சர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதியமைச்சர் என பல பதவிகளை வகிர்த்தவர்.


நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமை மிக்கவர் நிர்மலா சீதாராமன். 1970-71ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூடுதல் பொறுப்பாக மட்டுமே நிதித்துறையை கவனித்தார். நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக இருந்த காலத்தில் தான் உலக அளவில் இந்திய பொருளாதாரம் டாப் 5 இடங்களில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. 




லோக்சபா எம்பி.,யாக இல்லாமல், ராஜ்யசபா எம்பி.,யாக மட்டுமே இருந்து, இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெண் சக்தியாக வளர்ந்தவர். நாட்டின் வெற்றிகரமான நிதியமைச்சராக தன்னை நிரூபித்த நிர்மலா சித்தாராமன், இன்று பதவியேற்ற மோடி 3.ஓ.,வில் மீண்டும் மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார். அதனால் இந்த முறையும் இவருக்கு நிதித்துறையே வழங்கப்பட உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அமித்ஷா உள்ளிட்டோருக்கு அவர்கள் ஏற்கனவே வகித்த துறைகளே வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால், நிர்மலாவிற்கும் நிதித்துறையே வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.


மோடியின் 3 அமைச்சரவையிலும் இடம் பிடித்த ஒரே பெண் அமைச்சர் என்ற சாதனையை நிர்மலா சீதாராமன் படைத்துள்ளார் என்பது முக்கியமானது.


அதிகம் எதிர்பார்ப்பை இந்திய அரசியலில் ஏற்படுத்திய நிர்மலா சீதாராமனுக்கு சொந்தமாக கார் கூட என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, நிர்மலா சீதாராமனின் சொத்து மதிப்பு ரூ.2,50,99,396 ஆகும். இவருக்கு சொந்தமாக 315 கிராம் தங்கமும், 2 கிலோகிராம் வெள்ளியும் உள்ளதாம். சொந்தமாக கார் இல்லை.


அதே சமயம் தன்னுடைய பெயரில் பஜாஜ் சீடாக் ஸ்கூட்டர் மட்டும் வைத்துள்ளார். இவருக்கு ஐதராபாத் அருகில் ரூ.16 லட்சம் மதிப்பில் விவசாயம் அல்லாத நிலமும் உள்ளதாம். ரூ.1.87 கோடிக்கு அசையாத சொத்துக்களும், பெர்சனல் லோனாக ரூ.3.50 லட்சம் மற்றும் ரூ.30.44 லட்சமும் உள்ளது. 


ராஜ்யசபா தேர்தலுக்காக இவர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில் தனக்கு ரொக்க பணமாக ரூ.17,200 ம், ஃபிக்சிட் டெபாசிட்டாக ரூ.45.04 லட்சமும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.