சனாதன விவகாரம்.. "ஸாரி மன்னிப்பு கேட்க மாட்டேன்".. உதயநிதி ஸ்டாலின்

Meenakshi
Sep 06, 2023,01:44 PM IST
சென்னை: சனாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்த விவகாரம் தொடர்பாக, மன்னிப்பு கேட்க மறுப்பு தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களாக சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையாக மாறி விவாதங்களைக் கிளப்பி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் மிகப்பெரிய விவாதப் பொருளாகியுள்ளது. 

தனது பேச்சை பாஜகவினர் திரித்துப் பேசி வருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் தான் பேசியது சரியானதே. அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் பேசியதைத்தான் தான் பேசியதாகவும், சனாதனம் இந்தியாவிலிருந்து ஒழியும் வரை தொடர்ந்து பேசுவேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், இதற்காக எத்தனை வழக்குகள் வந்தாலும் தான் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும், கோர்ட்டிலும் கூட இதையே சொல்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்கள் அவரை சந்தித்தபோது, நீங்கள் சொன்னது போல ஜாதியப் பாகுபாடு இப்போது இருக்கிறது என்பதற்கு என்ன உதாரணம் என்று கேட்டார்கள். அதற்கு அவர்,  புது நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்டபோது, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அதற்கு அழைக்கப்படவில்லை. இதுதான் லேட்டஸ்ட் உதாரணம் என்றார். 

சனாதன விவகாரம் தொடர்பாக பேசிய பேச்சிற்கு மன்னிப்பு கேட்பீர்களா? என்றதற்கு, ஸாரி, மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின்.