3வது முறையாக செந்தில் பாலாஜி ஜாமின் மனு தள்ளுபடி.. நீதிபதி அல்லி கூறிய காரணம் இதுதான்!

Manjula Devi
Jan 12, 2024,07:12 PM IST

சென்னை : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூன்றாவது முறையாக ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.


அவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை இன்று சென்னை செஷன்ஸ் நீதிபதி அல்லி டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.


கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டத்திற்கு விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினரால்  கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. அதிமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி,  வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டார் என்பது அவர் மீதான வழக்கு. அவர் யார் யாருக்கு வேலை வாங்கி கொடுத்தார். அதற்காக எவ்வளவு பணம் பெறப்பட்டது, அதில் அவர்களின் பெயர்கள் உள்ள விவரம் இருப்பதாகவும், சட்டத்திற்கு விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததற்கு ஆதாரம் இருப்பதாகவும் கூறி அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.




இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி பின்னர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது ஜாமீனுக்காக தீவிரமாக முயற்சித்து வருகிறார்.


ஏற்கனவே செந்தில் பாலாஜி இரண்டு முறை ஜாமீன் கோரி மனு செய்திருந்த நிலையில், ஜாமீன் மறுக்கப்பட்டது. மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் அவர் ஜாமீன் மனு செய்திருந்தார். அதில் 200 நாட்களுக்கும் மேலாக தான் சிறையில் இருப்பதாகவும், அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.


நீதிபதி எஸ். அல்லி இந்த மனுவை விசாரித்து வந்தார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி தனது தீர்ப்பை அளித்தார். அப்போது, இந்த வழக்கில் இன்னும் சூழ்நிலை மாறாததால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


மீண்டும் ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகையை புழல் சிறையில்தான் செந்தில் பாலாஜி கொண்டாடும் சூழல் உருவாகியுள்ளது.