பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.. அமைச்சர் பொன்முடி!

Meenakshi
Apr 12, 2025,05:57 PM IST

சென்னை: தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி பேசியதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


கடந்த 6ம் தேதி ஞாயிற்று கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். அவர் ஆபாசமாக பேசியது தொடர்பாக வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.


பொன்முடிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில், கழக துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி அவர்கள், அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.




அதுமட்டும் இன்றி, இதற்கு முன்னர் இலவச பேருந்து திட்டத்தின் மூலம் பெண்கள் பயணிப்பதை ஓசி டிக்கெட் என்று கூறி பொன்முடி சர்ச்சையில் சிக்கியிருந்த, சம்பவத்தையும் நினைவு கூர்ந்து, அவருடைய அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.


இந்நிலையில், தனது தவறுக்கு மன்னிப்புகேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பொன்முடி. அதில், தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி பேசியதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். நீண்ட பொதுவாழ்க்கையில் உள்ள எனக்கு தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.