"கெட்அவுட் வார்த்தைக்கு உகந்தவர் பிரதமர் மோடி மட்டுமே!" - அமைச்சர் பி.கே.சேகர்பாபு..!

Meenakshi
Feb 21, 2025,02:20 PM IST

சென்னை: "கெட்அவுட் வார்த்தைக்கு உகந்தவர் பிரதமர் மோடி மட்டுமே!"  என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்   சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


கடந்த சில நாட்களாக திமுகவிற்கும் பாஜவிற்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு தற்போது வரை நடந்து வருகிறது.  பாஜக மற்றும் திமுக ஆகிய இரு  கட்சிகளை சேர்ந்தவர்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை கூறி வருகின்றனர். இந்த வார்த்தை மோதல் தற்போது சூடுபிடித்துள்ளது. கரூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசியிருந்தது வைரலாகியது. இதனையடுத்து, நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  செய்தியாளர்கள் சந்திப்பின் போது, என் வீட்டில் போஸ்டர் ஒட்டுவதாக தமிழக பாஜக தலைவர் கூறியிருந்தார். 


ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் எதையோ செய்வதாக தெரிவித்து இருந்தார். தைரியம் இருந்தால் அண்ணாசாலை பக்கம் வர சொல்லுங்கள். இன்றைக்கு நிகழ்ச்சி இருக்கு அங்க தான் இருப்பேன்.  தமிழகத்தில் நிதி உரிமையை திசை திருப்புவதற்காகவே இப்படி செய்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார். அதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் திமுகவினர் மொத்தமாக கெட் அவுட் மோடி என்று கோஷம் எழுப்பிய நிலையில், இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கெட் அவுட் ஸ்டாலின் என்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அமுத கரங்கள் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,  செய்தியாளர்களை சந்தித்து பேசுகிற அண்ணாமலை கர்நாடகா போலீஸ் ஆக இருந்ததை கொண்டு இப்பொழுதும் நினைத்துக் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் போலீஸ் இல்லை. அண்ணா சாலையில் தான் அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது.


 அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையாவது பிடுங்கும் வரை ஓயமாட்டேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார். தெம்பு, திராணி, தைரியம் இருந்தால் அண்ணா சாலையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒரு செங்கலையாவது தொட்டுப் பார்க்கட்டும். ஒரு அண்ணாமலை என்ன, ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் இது நடக்காது. கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் பிதற்றலோடு கூறி திரிவதை திமுக ஒருபோதும் அனுமதிக்காது.


அண்ணா அறிவாலயத்திற்கு அவர் திமுகவில் இணைய வரலாம். திமுக தலைவருடன் நட்பு பாராட்ட கூட வரலாம். ஆனால், அண்ணா அறிவாலயத்தில் உள்ள செங்கலை பிடுங்குவேன் என்பவரை எப்படி அனுமதிக்க முடியும். பொன். ராதாகிருஷ்ணன் மீது மரியாதை உள்ளது. அவரின் எண்ணங்களை இந்த வார்த்தைகள் பிரதிபலிக்கிறது. ஏற்கனவே கோ பேக் மோடி என்பதை பாஜக அனுபவித்தது. தற்போது மீண்டும் அவற்றை கையில் எடுத்துள்ளார்கள். தற்போது கெட் அவுட் என்ற வார்த்தைக்கு பிரதமர் மட்டுமே உகந்தவர் என்று தெரிவித்துள்ளார்.