அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்கமுடியாதவர் எப்படி செங்கலை பிடுங்க முடியும்?: அமைச்சர் சேகர்பாபு

Meenakshi
Feb 13, 2025,06:40 PM IST

சென்னை: திமுக தொண்டர்கள் தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே வளர்ந்து அரசியலை கரைத்துக் குடித்தவர்கள். அண்ணாமலையை போல் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல. திமுகவின் ஆலயமாக கருதப்படுகிற அறிவாலயத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாத அவரால் எப்படி செங்கலைப் பிடுங்க முடியும் என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


சென்னையில் பாஜக சார்பில் நேற்று பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், தமிழ்நாட்டில் நான் பாஜக தலைவராக பணியை தொடர முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால், நான் இருங்கிருந்து செல்லும் போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலையும் எடுக்காமல் விட மாட்டேன் என கூறியிருந்தார். 




இந்த பேச்சு திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு  இன்று பேசியுள்ளார்.  சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில் கூறியதாவது:


அறிவாலயத்தை  அசைத்து பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்கள் அடங்கி மண்ணோடு மண்ணாக போனது தான் கடந்த கால வரலாறு. திமுக இயக்கத்தில் உள்ள தொண்டர்கள் முதல் 2ம் கட்ட தலைவர்கள் வரை உள்ளவர்கள் உணர்வால் பின்னிப்பிணைந்தவர்கள். திமுக தொண்டர்கள் தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே வளர்ந்து அரசியலை கரைத்துக் குடித்தவர்கள். அண்ணாமலையை போல் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல. திமுகவின் ஆலயமாக கருதப்படுகிற அறிவாலயத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாத அவரால் எப்படி செங்கல்லைப் பிடுங்க முடியும்.


இரும்பு மனிதன் எனப் போற்றப்படுகின்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 75 ஆண்டுகள் கடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்துப் பார்க்க இன்னொருவர் பிறந்து தான் வரவேண்டும். திமுகவை அழிக்க புறப்படுபவர்கள் தங்களின் அழிவுக்கு தொடக்க புள்ளி வைக்கின்றனர். இவருடைய ஆணவப் பேச்சுக்கு தமிழக மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் மிருக பலத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத்தை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள். 


முதலில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை அண்ணாமலை மேற்கொள்ள வேண்டும். அவர் எங்கு நின்றாலும் தமிழ்நாட்டில் அவரை புறமுதுகிட்டு ஓடச் செய்ய திமுக கடைக்கோடி தொண்டனை நிற்க வைத்து முதல்வர் ஸ்டாலின் அவரை மண்ணை கவ்வ வைப்பார் என்று தெரிவித்துள்ளார்.