கைல காசு இல்லை.. அதான் தேர்தலில் போட்டியிடலை.. அதிர வைத்த நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன்!

Su.tha Arivalagan
Mar 28, 2024,07:17 PM IST

டெல்லி:  தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் அதற்கு பணம் தேவைப்படும். அந்த அளவுக்கு என்னிடம் பணம் இல்லாததால்தான் நான் தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டேன் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


லோக்சபா தேர்தலில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிடுவார் என்றுதான். புதுச்சேரியில் நிற்கப் போகிறார், தென் சென்னையில் போட்டியிடுவார், கோவையில் நிற்க வாய்ப்புள்ளது, பூர்வீக ஊரான திருச்சியில் போட்டியிடுவார் என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் போட்டியிடவில்லை. அவர் தேர்தலில் போட்டியிடாததையே திமுக கூட்டணியினர் ஒரு பிரச்சாரமாகவும் பேசி வருகின்றனர்.


நிர்மலா சீதாராமன் தற்போது கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் தான் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கியுள்ளார். டைம்ஸ் நவ் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ஆந்திரப் பிரதேசம் அல்லது தமிழ்நாடு, உங்களுக்குப் பிடித்த மாநிலத்தில் போட்டியிடலாம் என்ற வாய்ப்பை எனக்கு பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா அளித்தார். இதுகுறித்து நான் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் போல சிந்தித்துப் பார்த்தேன். பின்னர் அவரிடம், என்னால் போட்டியிட இயலாது என்று கூறி விட்டேன்.




தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை.  மேலும் ஆந்திராவைத் தேர்வு செய்வதா, தமிழ்நாட்டைத் தேர்வு செய்வதா என்பதிலும் எனக்குக் குழப்பம் இருந்தது. பிறகு நீங்க இந்த ஜாதியா, அந்த மதமா, இதுவா அதுவா என்ற கேள்விகள் எல்லாம் அவர்களிடம் இருக்கும். எனக்கு இதில் எல்லாம் உடன்பாடு கிடையாது.  இதனால் எல்லாமும்தான் நான் தேர்தலில் போட்டியிட விரும்பாததற்குக் காரணம்.


எனது வாதங்களையும், நான் கூறிய காரணங்களையும் அவர்கள் புரிந்து கொண்டார்கள், ஏற்றுக் கொண்டார்கள். அதற்காக நான் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார் நிர்மலா் சீதாராமன்.


இந்தியாவுக்கே நிதியமைச்சராக உள்ள உங்களிடம் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு பணம் இல்லை என்று நெறியாளர் கேட்டபோது, இந்தியாவின் நிதியமைச்சர்தான். அதற்காக இந்தியா முழுவதும் உள்ள நிதியெல்லாம் என்னுடையது இல்லையே. எனது சம்பளம், எனது சொத்து, எனது சேமிப்பு இது மட்டும்தானே எனது பணம் என்று சிரித்தபடி கூறினார் நிர்மலா சீதாராமன்.


நடப்பு மக்களவைத் தேர்தலில் பல அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். சமீபத்தில்தான் ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எல். முருகன், பியூஷ் கோயல், ராஜீவ் சந்திரசேகர், மன்சுக் மாண்டவ்யா, ஜோதிராத்யா சிந்தியா, பூபிந்தர் யாதவ் ஆகியோர் அவர்களில் சிலர். இவர்கள் அனைவருமே ராஜ்யசபா உறுப்பினர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்து.


தான் போட்டியிடாவிட்டாலும் கூட மற்ற வேட்பாளர்களுக்காக தான் பிரச்சாரம் செய்வேன் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.