மதுபானி கலை பாணியிலான சேலை அணிந்து பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்
டெல்லி: பிகாரின் மதுபானி கலைநயத்துடன் கூடிய சேலையை அணிந்து வந்து 2025ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8வது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் நிர்மலா சீதாராமன் அணிந்து வரும் சேலை மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படும். அந்த வகையில், இந்தாண்டிற்கான பட்ஜெட் வாசிப்பதற்காக வந்த நிர்மலா சீதாராமன் மதுபானி சேலை அணிந்து வந்திருந்தார். இந்த சேலை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை.
மதுபானி ஓவியம் இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் மதுபனி மாவட்டத்தில் தோன்றிய கலையாகும். மதுபானி மாவட்டத்தில் தோன்றியதால் இந்த ஓவியங்கள் இப்பெயர் பெற்றது. மதுபானி ஓவியம் மிகவும் பழமையானதாகும். இராமாயண காலத்தில் ஜனக மஹாராஜா தனது மகளான சீதையின் திருமணத்திற்காக மதுபானி ஓவியர்களை வரவழைத்து மதுபானி ஓவியங்களை வரைய வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
முதலில் சுவர்களையும், தரையையும் அலங்கரித்த இவ்வகை ஓவியங்கள் மெல்ல மெல்ல காகிதங்கள் மற்றும் துணிகளில் இடம் பெற ஆரம்பித்தன. வட இந்தியாவில் மட்டுமே பிரபலமான இவ்வகை சேலைகள் மெல்ல மெல்ல தென்னிந்திய் பெண்களின் மனதையும் கவரத் தொடங்கியது. தற்பொழுது இந்த வகை சேலைகள் அனைத்து தரப்பு பெண்களையும் கவர்ந்து வருகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சேலையை அணிந்து வந்து நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
இவர் அணிந்து வந்த இந்த சேலை மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. பத்ம விருதுபெற்ற துலாரி தேவி வடிவமைத்ததாகும். மதுபானி கலை வேலைப்பாட்டுடன் வெண்மை நிறச் பட்டுச்சேலையை அணிந்து வந்திருந்தார் நிர்மலா சீதாராமன். பார்க்க படு சிம்பிளாக இருந்தாலும், கிராண்டான தோற்றத்தையும் இது கொடுக்கும் என்பதுதான் இதன் விசேஷமே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்