மதுக்கடைகளை நடத்துவதில் முதல்வருக்கு விருப்பமில்லை.. ஆனால் உடனே மூட முடியாது.. அமைச்சர் முத்துசாமி

Meenakshi
Sep 12, 2024,06:42 PM IST

ஈரோடு: மதுக்கடைகளை நடத்துவதில் முதல்வருக்கு எள்ளளவும் விருப்பமில்லை. என்றைக்காவது ஒருநாள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பது தான் முதல்வரின் எண்ணம். ஆனால் உடனடியாக கடைகளை மொத்தமாக மூடுவது இயலாத காரியம் என்று  அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்,அக்டோபர் 2ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் மது போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசினார் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி. அப்போது அவர் பேசுகையில், என்றைக்காவது ஒரு நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதுதான் முதல்வரின் எண்ணம். முதல்வர் ஒரே நாளில் உத்தரவு பிறப்பித்து மதுக் கடைகளை மூடலாம். டாஸ்மாக் கடைகள் நடப்பது முதல்வருக்கு எள்ளளவும் விருப்பமில்லை. 




ஆனால், உடனடியாக இதைச் செய்தால் என்ன நிலைமை ஏற்படும் என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள் வேறு வழியில் சென்று தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையை நிதானமாக அணுகி கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். எனவே மக்களை அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டு வந்து மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து இங்குள்ள சூழ்நிலை பொருத்துதான் அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


விசிகவை பொறுத்தவரை அவர்கள் கொள்கை ரீதியாக ஒரு மாநாடு நடத்துகிறார்கள். அதில், எந்த தவறு சொல்ல முடியாது. இவர்கள் திமுகவை முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து இதனை செய்யவில்லை. அவர்கள் இந்த மாநாட்டின் மூலமாக மக்களை மது விலக்கில் இருந்து வெளியே கொண்டு வரலாம். அதற்கு பின்னர் மது விலக்கை செயல்படுத்த அரசுக்கு சுலபமாக இருக்கும். விசிக மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தவறு அல்ல. இது ஒரு பொதுவான நிகழ்வு. திருமாவளவன் பொதுவான அழைப்பை விடுத்துள்ளார். ஈரோட்டில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  இது சர்வதேச தரத்தில் அமையும் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்