தமிழ்நாட்டில்.. ஆவின் பால் விற்பனை 23% அதிகரிப்பு.. அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

Meenakshi
Jun 19, 2024,04:03 PM IST

சென்னை: கடந்தாண்டை விட ஆவின் பால் விற்பனை 23 சதவீதம் அதிகரித்துள்ளது. தனியார் பால் கொள்முதலை விட கூட்டுறவு மூலம் அதிக விலைக்கு ஆவின் கொள்முதல் செய்கிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், ஆவின் நிர்வாகம் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளால் பால் கொள்முதலில்  புதிய இலக்கை எட்டவுள்ளோம். ஆவின் பொருட்களை  கூட்டுறவு துறையுடன் இணைந்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த ஆண்டை விட பால் விற்பனை 23 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தாண்டில் அது மேலும் அதிகரிக்கும்.




தனியார் பால் கொள்முதலை விட கூட்டுறவு மூலம் விலைக்கு ஆவின் கொள்முதல் செய்கிறது.தனியார் பால் நிறுவனங்கள் விலையை குறைத்ததால் அது ஆவின் பால் விற்பனையை பாதிக்காது. புதிய கால்நடைகள் வாங்க விவசாயிகள் ஆவின் நிர்வாகத்தை அணுகலாம். ஆவினில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன.


இந்தாண்டு விவசாயிகளை மையப்படுத்திய ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயி்ற்சி கொடுத்தில், செயல்முறை விளக்கம் அளித்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த காலத்தை ஒப்பிடும் போது தற்போது பால் வளத்தில் ஒரு முன்னேற்ற நிலை ஏற்பட்டுள்ளது.


நம்முடைய மக்கள் தொகை, நமக்கான தேவைகள், மக்களுக்கான வேலை வாய்ப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப இன்னும் நாம் வளர வேண்டும். வரும் காலத்தில் நம்முடைய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. பொதுமக்கள்  ஆவினை நம்புகிறார்கள், ஆவினை விரும்புகிறார்கள். ஆவின் விலை மற்ற விலையை விட குறைவு. தற்போது வரை 7 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது. வரும் காலங்களிலில் இது 40 லட்சம் லிட்டராக உயரும் வாய்ப்பு உள்ளது. அதற்கான பணிகளை தற்போது செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.