தொப்புள் கொடி விவகாரம்.. இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியம்

Meenakshi
Oct 22, 2024,01:01 PM IST

சென்னை: தொப்புள் கொடி அறுப்பு விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட முடியாது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


யூடியூபர் இர்பான் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொண்டு, அதனை வீடியோவாகவும் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவை நீக்க வேண்டும் என்றும் இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்பின்னர் அந்த வீடியோ இணையதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இர்பான் மருத்துவ குழுவிடம்  மன்னிப்பு கேட்டதால், அவர் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. 




இதனையடுத்து, தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் இர்பான். இர்பான் தனது மனைவியின் பிரசவத்தின்போது ஆபரேஷன் அறைக்கும் சென்றுள்ளார். தனது குழந்தையின் தொப்புள் கொடியை கட் செய்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்து இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது.மருத்துவச் சட்டத்தின் படி இது தவறு என்றும், மேலும், பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும் என்றும், தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், இர்பான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட யூடியூபர் இர்பானை மன்னிக்க முடியாது. இர்பான் செய்தது மன்னிக்கக் கூடிய அல்ல. கண்டிக்கக் கூடியது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது  என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்