மாசம் ரூ. 12,000 சம்பளம்.. காகிதம் சேகரிக்கும் நபருக்கு வேலை போட்டுக் கொடுத்த அமைச்சர் மா.சு!

Manjula Devi
Jul 22, 2024,04:34 PM IST

சென்னை: சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காகிதம் பொறுக்கும்  திருச்சியை சேர்ந்த ராஜா என்பவருக்கு உணவு மற்றும் உடை வழங்கி அவர் வாழ்வாதாரத்திற்காக மாதம் 12,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலையும் வழங்கி உள்ளார். இவருடைய இந்த செயலுக்கு  பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


மா. சுப்பிரமணியன் திமுகவின் முன்னோடி தலைவர்களில் ஒருவர். வழக்கறிஞரான இவர் இவர் 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை சென்னையில் மேயராக பணியாற்றியவர். இதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு மேயர் தேர்தலில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் சையதை துரைசாமியிடம் தோல்வி அடைந்தார். இதன் பின்னர் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தமிழக மக்கள் வாழ்வு அமைச்சசராக பதவி வகித்து  வருகிறார்.




நடைப் பயிற்சிக்கும், மராத்தான் ஓட்டத்திற்கும் பெயர் போனவர். அடாத மழையே பெய்தாலும், விடாமல் புயலே வீசினாலும் நடைப் பயிற்சியை விட மாட்டார்.  மா. சுப்ரமணியன் இன்று காலை வழக்கம் போல நடைபயிற்சி  முடித்து வந்துகொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் பேப்பர் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை சேகரித்துக் கொண்டிருந்த ஒருவர் அமைச்சரை அடையாளங் கண்டு வணக்கம் சொன்னார்.


அவர் யார் என்பது குறித்து விசாரித்தபோது, அவர்  திருச்சியை சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் ராஜா என்றும் தகவல் கிடைத்தது. 

அவர் தினந்தோறும் இப்பணியை செய்து அதில் கிடைக்கும் வருவாயில் அரைகுறையாக உண்டு சாலையோரங்களில் படுத்துறங்கும் ஆதரவற்றவர் என்பதும் தெரியவந்தது.  இதையடுத்து அவரை தனது குடியிருப்புக்கு அழைத்துச் சென்ற அமைச்சர் மா.சு, அவரை  குளிக்கவைத்து மாற்று உடை மற்றும் உணவுகளை வழங்கி இருக்கிறார். பின்னர்  கலைஞர் நூற்றாண்டு உயற்சிறப்பு மருத்துவமனையில் அந்த இளைஞரின் நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சைகளை வழங்க ஏற்பாடு செய்தார். 


அத்தோடு நில்லாமல், அதே மருத்துவமனையில் மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் அந்த இளைஞரின் 

வாழ்வாதாரத்திற்கு தற்காலிக பணி ஒன்றிலும்  சேர்த்து விட்டிருக்கிறார் அமைச்சர் மா சுப்பிரமணியன். அமைச்சர் மா சுப்பிரமணியனின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.