தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது.. மக்களிடம் விழிப்புணர்வு உள்ளது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Meenakshi
Sep 09, 2024,04:33 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மக்களுக்கு போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து மருந்து தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,




உலக அளவில் 63 நாடுகளில் குரங்கம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. நமது நாட்டில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் தலா ஒருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் குரங்கமை பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை.


குரங்கம்மை அறிகுறியுடன் இந்தியா வந்தவரை தனிமைப்படுத்தி சிகிச்சை தருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.அவர் எந்த நாட்டில் இருந்து வந்தார்? தற்போது எங்கே இருக்கிறார் என்ற தகவலை அரசு ரகசியமாக வைத்துள்ளது. விமான நிலையங்களில் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. கேரளாவில் குரங்கம்மை பாதிப்பு இருப்பதால் தமிழக கேரள எல்லையில் உள்ள 13 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக பெரியவர்கள், குழந்தைகளுக்கு முகம் மற்றும் முழங்கைக்கு கீழ் பகுதியில் புதிதாக கொப்பளங்கள் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.


குரங்கம்மை பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் ஸ்லைடுகள் மற்றும் போஸ்டர்கள் திரையில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. நகர பகுதிகளில் பொது சுகாதாரத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என்றும், மக்களிடையே டெங்கு தொற்று குறித்து போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றும், மேலும், டெங்கு காய்ச்சலால் இதுவரை 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்