புயல் பாதித்த மாவட்டங்களில் பால் விநியோகம் சீரானது: அமைச்சர் மனோ தங்கராஜ்

Meenakshi
Dec 08, 2023,01:24 PM IST

சென்னை: சென்னை உள்ளிட்ட புயல் பாதித்த 4 மாவட்டங்களில் பால் விநியோகம்  சீராகியுள்ளதாக அமைச்சர் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.


மிச்சாங்  புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக பால், உணவு போன்ற அத்தியாவசிய  பொருட்கள் கிடைக்காமல் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக குழந்தைகளுக்கு தேவையான பால் கிடைப்பதில் அதிகம் சிரமம் ஏற்பட்டது.


மழை நீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டதால் வாகனங்கள் மழை வெள்ளதில் சிக்கிக் கொண்டது. இதனால் பால் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. குறைவாக பால் இருந்ததினால் அதை மக்கள் அதிக விலைக்கு வரிசையில் நின்று வாங்கும் நிலை ஏற்பட்டது. பால் விலை அதிகம் விற்பதாக வந்த புகாரின் பேரில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பால் விலை அதிகம் பெறப்பட்டால் முகவர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.




இந்நிலையில், இன்று சென்னை அடையாற்றில் உள்ள ஆவின் பாலகத்தில் ஆய்வு மெற்கொண்டார். ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், சென்னை முழுவதும் தங்கு தடை இன்றி ஆவின் பால் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் ஆவின் பால் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே தற்பொழுது இடமில்லை. மிச்சாங் புயல் பாதிப்புக்குள்ளான சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள் பால் விநியோகம் இன்று  சீரானது. 


வெள்ளை பாதிப்பால் ஆவின் பணியாளர்கள் வருவதில் சிரமம் இருந்தது. அவர்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் நிலையில் அவர்கள் வருவதில் தான் சிரமம் ஏற்பட்டது. மற்றபடி அவர்களை குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர்கள் பால் கொண்டு வருவதிலும் சிரமம் இருந்தது.  இக்கட்டான சூழலில் வழக்கத்தை விட நேற்று அதிகமாக பால் வினியோகம் செய்யப்பட்டது. அதாவது நேற்று அதிகபட்சமாக 25 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இன்று பதற்றம் இல்லை. சோழிங்கநல்லூர், மாதவரம், அம்பத்தூர் பால் உற்பத்தி நிலையங்கள் மீண்டும் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ளன. நேற்று  மாலையிலிருந்து நிலைமை சீராக உள்ளது என்று கூறியுள்ளார்.