ஜாமீன் கிடையாது.. அதிரடியாக கூறிய கோர்ட்.. மயக்கம் போட்டு விழுந்த மைக்கேல் ஸ்லாட்டர்!

Su.tha Arivalagan
Apr 16, 2024,03:41 PM IST

சிட்னி: முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லாட்டருக்கு ஆஸ்திரேலியா கோர்ட் ஜாமீன் மறுத்தது. இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் கோர்ட்டுக்கு வந்திருந்த ஸ்லாட்டர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.


54 வயதாகும் மைக்கேல் ஸ்லாட்டர் மீது ஏகப்பட்ட புகார்கள் கிளம்பின. குறிப்பாக வீட்டு வன்முறை, பெண்ணைப் பின் தொடர்ந்தது, போன் செய்து மிரட்டுவது, ஆபாச மெசேஜ் அனுப்புவது என ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து அவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இதில் ஜாமீன் கோரி அவர் க்வீன்ஸ்லாந்து கோர்ட்டில் மனு செய்திருந்தார். 


ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது ஸ்லாட்டரும் கோர்ட்டில் ஆஜராகியிருந்தார். ஆனால் அவருக்கு நீதிபதி ஜாமீன் தர மறுத்து விட்டார். மேலும் ஸ்லாட்டரை சிறையில் அடைக்குமாறும் உத்தரவிட்டார். மே 31ம் தேதி மீண்டும் ஸ்லாட்டரை கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.




இதனால் அதிர்ச்சி  அடைந்த ஸ்லாட்டர் அப்படியே மயக்கம் போட்டு விழுந்தார். கோர்ட் ஊழியர்கள் உடனடியாக அவரை அப்படியே தாங்கிப் பிடித்த அமர வைத்தனர். பின்னர் அவர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.


மைக்கேல் ஸ்லேட்டர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக வலம் வந்தவர். 74 டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடியுள்ளார்.  14 சதங்களுடன் 5000க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார்.  அதேபோல 42 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள ஸ்லாட்டர், 2004ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலிய அணியில் விளையாடியபோடு அதிரடியான ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளங்கியவர் ஸ்லாட்டர்.


ஸ்லாட்டருக்கு ஏற்கனவே மன நல பிரச்சினைகள் இருப்பதாக கூறி அதுதொடர்பான சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு கோர்ட் உத்ததரவிட்டிருந்தது. அந்த சிகிச்சை முடிந்த நிலையில்தான் தற்போது மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கி கைதாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.