மின்னல் வேகத்தில் வந்த பேரரசி.. செல்பி எடுக்க உட்கார்ந்த பெண்.. தலையில் தட்டி.. கொடுமை!

Manjula Devi
Jun 08, 2024,05:35 PM IST

 மெக்சிகோ சிட்டி:  பேரரசி என்று செல்லமாக அழைக்கப்படும் பழைய நீராவி ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற ஒரு இளம் பெண் பரிதாபமாக தலையில் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. செல்பி எடுப்பதற்காக, கொஞ்சம் கூட யோசனையே இல்லாமல், மிக மிக விபரீதமான செயல்களில் ஈடுபடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இன்னும் ஒரு சம்பவமாக இது மாறியுள்ளது.


1930 ஆம் ஆண்டு நீராவி இன்ஜின் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பழங்கால ரயிலுக்கு எம்ப்ரஸ் 2816 என்று பெயர். தற்போது மீண்டும் இந்த ரயில் மெக்சிகோவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பேரரசி ரயில்  கடந்த ஏப்ரல் மாதம் கால்காரியிலிருந்து  புறப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ரயில் கனடா மற்றும் அமெரிக்க வழியாக மெக்சிகோவின் தலைநகர் மெக்சிகோ சிட்டியை சென்றடையும்.  அங்கிருந்து  ஜூலை மாதம் கனடா திரும்புவதுடன் அதன் பயணம் நிறைவடையும்.




இதையடுத்து இந்த ரயிலைக் காண ஆங்காங்கே மக்கள் கூடி செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். அந்த வகையில், பேரரசி ரயிலை காண பலரும் ஹிடால்கோ என்ற இடத்தில்  கூடியிருந்தனர். அந்த இடத்தில் ரயில் கிராஸ் செய்தபோது பலரும் புகைப்படம் எடுத்தனர். அப்போது இளம் பெண் ஒருவர் தன் மகனுடன் வந்து செல்பி எடுக்க முயன்றார். ரயில் பாதைக்கு வெகு அருகே போய் முட்டி போட்டு செல்பி எடுக்க முயன்றார். அப்போது ரயிலின் பக்கவாட்டுப் பகுதி பலமாக அவரது பின்னந்தலையில் மோதியது. 


மோதிய வேகத்தில் அந்தப் பெண் சுருண்டு கீழே விழுந்து உயிரிழந்தார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தது அந்தப் பகுதியில் கூடியிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. என்ன கொடுமை என்றால் இப்பெண் ரயிலில் அடிபட்டு கீழே விழுந்தும் கூட பலர் விடாமல் ரயிலை புகைப்படம், வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர் என்பதுதான்.