மேட்டூர் அணையில் இருந்து.. 1.75 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு.. மக்களுக்கு எச்சரிக்கை!

Manjula Devi
Jul 31, 2024,10:49 AM IST

சேலம்:   மேட்டூர் அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வினாடிக்கு 1.75 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்படலாம் என நீர்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் தற்போது மேட்டூர் அணையிலிருந்து அதிகப்படியான உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  




இதனால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வறண்ட ஏரிகளிலும் பயன்பட வேண்டும் என்ற அடிப்படையில், முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின் படி, 673 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடப்பாடி, தங்ககிரி,தாரமங்கலம் உள்ளிட்ட 100 ஏரிகளில் நீர் நிரப்ப திட்டம் நிறைவேற்றப்பட்டு தற்போது முதற்கட்டமாக 56 ஏரிகளில் திப்பம்பட்டி நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.


கல்லணை நீர் திறப்பு: 


அதேபோல் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் டெல்டா விவசாயிகள் பயன்படும் வகையில் கல்லணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  இன்று காலை 9 மணி முதல் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட உள்ளது. அணையிலிருந்து தற்போது வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், எந்த நேரத்திலும் 1.75 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடலாம் என்பதால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க நீர்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


இதற்கிடையே சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி 16 கண் மதகு அருகே வசிக்கும் பகுதியை ஆய்வு செய்து அங்கிருந்த 78 குடும்பங்களை சேர்ந்த 204 பேர்களை  மீட்டு தனியார் மண்டபங்களில் பாதுகாப்பாக தங்க வைக்க உத்தரவிட்டார்.


காவிரி ஆற்றில் நுரைத்துக் கொண்டு தண்ணீர் பிரவாகம் எடுத்து ஓடி வருவதை வேடிக்கை பார்க்க ஆங்காங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அபாயகரமான முறையில் வேடிக்கை பார்க்கப் போவதோ, செல்பி எடுப்பதோ தவிர்க்கப்பட வேண்டும் என்று காவல்துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.