24 மணி நேரத்தில்.. மேட்டூர் அணையின் நீர்மட்டம்.. 75 அடியை தாண்டியது.. தொடர்ந்து நீர்வரத்து

Manjula Devi
Jul 22, 2024,05:53 PM IST

சேலம்:   நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தென்மேற்குப் பருவ மழை அதி தீவிரம் அடைந்ததை அடுத்து கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதே போல் கேரளா வயநாடு நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண சாகர் அணைகளுக்கு நாளுக்கு நாள் நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. 


குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண சாகர் அணை  முழுவதுமாக நிரம்பியதால் கரையோரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை கருதி காவிரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கலில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கலில் நேற்று இரவு  வரை வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 74 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.




மேலும் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதால் ஆற்றியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏழாவது நாளாக ஒக்கேனக்கலில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 64, 033 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு  நேற்று இரவு 58,934 கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 64,033 கன அடியாக அதிகரித்துள்ளது.


மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி ஆகும். தற்போது காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டு நீர்வரத்து அதிகரிப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை தாண்டி உள்ளது. அணையின் நீர்மட்டம் கடந்த 24 மணி நேரத்தில் 7 அடி வரை உயர்ந்துள்ளது. இதனால் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நீர் வரத்தை கண்காணிக்கவும் சேலம் மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்.