சென்னை சென்டிரல் - விமான நிலையம் இடையே மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது!

Su.tha Arivalagan
May 15, 2024,01:36 PM IST

சென்னை: டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்டிரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் மெட்ரோ இடையிலான மெட்ரோ ரயில் சேவை அவசர கால பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முழுவதும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


அவசர கால பராமரிப்புப் பணிகள் காரணமாக டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்டிரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் மெட்ரோ இடையிலான சேவை இன்று நாள் முழுமைக்கும் ரத்து செய்யப்படுவதாகவும், பயணிகள், ஆலந்தூர் மெட்ரோவில் இறங்கி தொடர்ந்து பயணிக்கலாம் என்றும் மெட்ரோ நிறுவனம் இன்று காலை அறிவித்திருந்தது.





அதேசமயம், ப்ளூ லைனில் விம்கோ நகர்  முதல் விமான நிலையம் வரையிலும், கிரீன் லைனில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்டிரல் மெட்ரோ முதல் புனித தாமஸ் மலை மெட்ரோ வரையிலும் ரயில்கள் வழக்கம் போல செயல்படுகின்றன. இந்த மார்க்கங்களில் வாராந்திர அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றும் மெட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தது.


இந்த நிலையில் தற்போது சீரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளதால் வழக்கம் போல சென்டிரல் மெட்ரோவுக்கும், விமான நிலையம் மெட்ரோவுக்கும்  இடையே போக்குவரத்துத்  தொடங்கியிருப்பதாக மெட்ரோ நிறுவன செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மெட்ரோ  சேவைகள் இயல்பு நிலையை அடைந்துள்ளன.