பிரசவ விடுமுறை ரத்து.. வேலையை விட்டு தூக்கப்பட்ட மெட்டா பெண் பணியாளர்!

Su.tha Arivalagan
Mar 31, 2023,12:22 PM IST
டெல்லி: பிரசவ கால விடுமுறையில் இருந்து வந்த பெண் பணியாளரின் விடுமுறையை ரத்து செய்து அவரை வேலையை விட்டும் நீக்கியுள்ளது மெட்டா நிறுவனம்.

உலகம் முழுவதும் பெரும் பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகப் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் ஆட் குறைப்பு குறித்து பேச்சாகவே உள்ளது. லட்சக்கணக்கான ஊழியர்கள் உலகம் முழுவதும் கடந்த ஓராண்டில் வேலையை இழந்துள்ளனர்.



இந்த நிலையில் மெட்டா நிறுவனம் தனது 2வது கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 10,000 பேரை அது வேலையிலிருந்து அனுப்புகிறது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் சிக்கி வேலையை இழந்துள்ளார் சாரா ஸ்னீடர் என்ற பெண் பணியாளர். 

சாரா தற்போது மெட்டர்னிட்டி லீவில் இருந்து வந்தார். அவரது விடுமுறையை ரத்து செய்து, வேலையை விட்டு அனுப்பியுள்ளதாம் மெட்டா. கடந்த 3 வருடமாக அவர் மெட்டாவில் பணியாற்றி வந்துள்ளார். இதுகுறித்து தனது லிங்க்டஇன் பக்கத்தில் சாரா குறிப்பிடுகையில், மெட்டாவின் அமெரிக்க அலுவலகத்தில் முதுநிலை ஆள் எடுப்பாளராக பணியாற்றி வந்தேன். எனது மெட்டர்னிட்டி லீவை ரத்து செய்து விட்டு தற்போது வேலையை விட்டு நீக்கியுள்ளனர். 3 வருடங்கள் அருமையான அனுபவம் இங்கு கிடைத்தது.  சிறந்த அணிகளுடனும், சிறந்த மனிதர்களுடனும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. 

இந்த ஆட்குறைப்பு திறமையின் அடிப்படையில் நடக்கவில்லை. மாறாக பல்வேறு திறமையாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  மெட்டாவில் வேலை பார்த்தபோதுதான் எனது காதலர் எனக்குக் கிடைத்தார். எங்களுக்குத் திருமணமானது. குழந்தைப் பேறும் கிடைத்தது. முதல் குழந்தையும் பிறந்தது. .மறக்க முடியாத அனுபவம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ஸ்னீடர்.

ஒவ்வொரு ஆட்குறைப்பும்.. ரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளாக மாறி வருவது வேதனை தருகிறது.