மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீட குரு பங்காரு அடிகளார் காலமானார்

Su.tha Arivalagan
Oct 19, 2023,06:20 PM IST

சென்னை: மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீட குருவான பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்.


82 வயதான பங்காரு அடிகளார், மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவர். ஆன்மீக குருவான பங்காரு அடிகளார் பல காலமாக பல்வேறு ஆன்மீகத் தொண்டுகளைச் செய்து வந்தார். 




சித்தர் பீடத்தில் பெண்கள்தான் முழுக்க முழுக்க பூஜைகளைச் செய்வார்கள். இது தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் மிகவும் புரட்சிகரமான விஷயமாக இருந்தது. ஆன்மீக சித்தர் பீடத்தின் மூலமாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றையும் நிறுவி நடத்தி வந்தார் பங்காரு அடிகளார்.


இன்று தனது சித்தர் பீட குடிலில் வழக்கம் போல ஓய்வில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு  ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பங்காரு அடிகளாரின் மரணச் செய்தி அவரது பக்தர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் ஆதி பராசக்தி பீடத்தின் கிளைகள் உள்ளன. அனைத்துப் பக்தர்களும் தற்போது பெரும் சோகமடைந்துள்ளனர்.


2019ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர் பங்காரு அடிகளார். அனைத்துத் தரப்பினரின் அன்பு, மரியாதையைப் பெற்ற பங்காரு அடிகளாரின் மரணம் ஆன்மீக உலகுக்கு பேரிழப்பு ஆகும்.


நாளை இறுதிச் சடங்கு:


பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பக்தர்கள், பல்துறைப் பிரமுகர்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படவுள்ளது. 


பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அடிகளாரின் கல்விச்சேவை, ஆன்மீகச் சேவையை அவர்கள் புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.